ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை இழந்த டாக்டர் ராமதாஸ் கூறும்போது இந்த வழக்கில் போலி பெண் வங்கி அதிகாரி உட்பட 4 பேர் இன்னும் கைது செய்யப்படவில்லை….
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் ராமதாஸ். இவர் நாகர்கோவில் நான்குவழிச்சாலை பகுதியில் பல்நோக்கு மருத்துவ மனை ஒன்று கட்ட முயற்சிகள் மேற்கொண்டுவந்தார். இதற்காக அவர் வங்கியில் 50 கோடி ரூபாய் கடன் பெற முடிவு செய்தார். இது தொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த நல்ல கனி என்பவர் டாக்டர் ராமதாசை தொடர்புகொண்டு மருத்துவமனை கட்டுவதற்குரிய பணத்தை வெளிநாட்டு வாழ் இந்தியர் இடமிருந்து பெற்றுத் தருவதாகவும் இதற்காக ஆஸ்திரேலியாவில் வங்கி கணக்கு ஒன்றை துவக்க வேண்டும் என்று கூறி டாக்டர் ராமதாஸிடம் போலி ஆடிட்டர், மும்பை ஆஸ்திரேலியன் வங்கியில் இருந்து அழைத்து வரப்பட்டதாக கூறப்பட்ட போலி வங்கி ஊழியர், போலி வங்கி அதிகாரி அனிதா டேவிட் என்ற பெண், கார் டிரைவர் என கூறப்படும் நபர் ஆகியோரை அறிமுகப்படுத்தி சுமார் ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து போலியாக ஆஸ்திரேலிய வங்கியின் வெப்சைட் ஐயும் பாஸ்வேர்டை கொடுத்து அதனை திறந்து பார்த்தபோது 50 கோடி ரூபாய் பணம் கிரெடிட் ஆனது போன்ற தோற்றத்தை உருவாக்கி இருந்தனர். இதனை அடுத்து மோசடியாளர்கள் டாக்டர் ராமதாஸ் இடம் இந்த பணத்தை பெற ஆஸ்திரேலியா செல்ல வேண்டும் அதற்காக விமான டிக்கெட் போட வேண்டும் என்று நல்லகனி கூறியதாகத் தெரிகிறது. இதனை அடுத்து டாக்டர் ராமதாஸ் மும்பை சென்று நரிமன் பாயின்ட் இல் உள்ள ஆஸ்திரேலியா வங்கி சென்று பார்த்தபோது அங்கு, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் நாகர்கோவில் வந்து மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு நல்ல கனி என்பவரை கைது செய்தனர். விசாரணையில் நல்ல கனி தூத்துக்குடியை சேர்ந்த போலி வக்கீல் என்றும் இவர் பல பெயரில் ஆதார் கார்டு டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை வைத்து பல்வேறு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. குறிப்பாக இவர் இரிடியம் மோசடி, மண்ணுளிப்பாம்பு வெளிநாட்டிற்கு விற்பனை, கொலை வழக்கு, ஆள் கடத்தல் போன்ற பல்வேறு குற்ற சம்பவங்களில் சம்பந்தப்பட்டிருப்பதாக டாக்டர் ராமதாஸின் வழக்கறிஞர் ஹரி தெரிவித்தார். இதில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை இழந்த டாக்டர் ராமதாஸ் கூறும்போது இந்த வழக்கில் போலி பெண் வங்கி அதிகாரி உட்பட 4 பேர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டால் தான் இவர்கள் வேறு எந்தெந்த மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர் என்ற விவரம் தெரிய வரும். எனவே அதற்குரிய நடவடிக்கையை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விரைந்து எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.