ஈரோட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்றஆட்சியரிடம் மனு
![]()
ஈரோட்டில் பள்ளி மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி ஈரோடு ஆட்சியரிடம் மனு
ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகள் மற்றும் கோவில்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை அகற்றக் கோரியும், மாவட்டம் முழுவதும் இது குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தியும் தன்னார்வலர் ராயல் K.சரவணன் மற்றும் ‘We The Leaders’ அமைப்பினர் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில், பெருந்துறை ஒன்றியம், ஈங்கூர் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை எண்: 3900 ஆனது பள்ளி வளாகத்தில் இருந்து சுமார் 375 மீட்டர் தொலைவிலும், அம்மாபேட்டை ஒன்றியம், சென்னம்பட்டி ஊராட்சி, சந்தப்பேட்டை பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை எண்: 3952 ஆனது ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலிருந்து சுமார் 250 மீட்டர் தொலைவிலும் இயங்கி வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தகைய கடைகளால் பள்ளி மாணவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களையும் பாதுகாப்பு அச்சத்தையும் எதிர்கொண்டு வருவதால், அப்பகுதி பொதுமக்கள் கையொப்பமிட்டு அளித்த மனுக்களை இணைத்து, இந்த இரு கடைகளின் நிலையையும் விதிமுறைகளின்படி ஆய்வு செய்து உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் முழுமையாக ஆய்வு செய்து, அவை அனைத்தும் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் கோவில்களில் இருந்து குறைந்தபட்சம் 500 மீட்டர் தொலைவிற்கு அப்பாற்பட்டு மட்டுமே செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகளை உடனடியாக இடமாற்றம் செய்யவோ அல்லது முற்றிலும் அகற்றவோ தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது உடன் பிரகாஷ், சின்னத்துரை, கார்த்திக், விவேக், நாராயணசாமி, தேவராஜ், பாலமுருகன் உட்பட பலர் இருந்தனர்.

