பாலியல் வன்கொடுமை : 13 ஆண்டுகள் சிறை
![]()
13 வயது சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை : 13 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 16 ஆயிரம் அபராதம் : திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு :
திருவள்ளூர் அக் 29 : சென்னையை அடுத்த அம்பத்தூர் ஓரகடம் பகுதியைச் சேர்ந்தவர் அழகரசன் (37). இவர் கடந்த 2019 ம் ஆண்டு மார்ச் 25 ம் தேதி திருமுல்லைவாயல் பகுதியில் 13 வயது சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.இதுகுறித்து இந்த சிறுமியின் பெற்றோர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அழகரசன் (37) என்பவரை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் டி.விஜயலட்சுமி ஆஜராகி வாதாடினார்.இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி உமா மகேஸ்வரி வழங்கிய தீர்ப்பில் பெண்குழந்தையை வீட்டில் சட்டவிரோதமான முறையில் அடைத்து வைத்த குற்றத்திற்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 1000 அபராதமும், அத்து மீறி வீட்டிற்குள் நுழைந்த குற்றத்திற்காக 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 10 ஆயிரம் அபராதமும், பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக 5 ஆண்டு சிறைதண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும், என மொத்தம் 13 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 16 ஆயிரம் அபாராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த தண்டனையை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும், மேலும் சிறுமிக்கு ரூ. 3 லட்சம் நிவாரண தொகை வழங்கவும் நீதிபதி உமாமகேஸ்வரி தீர்ப்பளித்தார். இதனையடுத்து அம்பத்துார் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அழகரசனை புழல் சிறையில் அடைத்தனர்.

