மாற்றுத்திறனாளிகள் தினம்.. விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த அமைச்சர் சா.மு.நாசர்!
![]()
ஆவடியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வட்டம் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் முன்னிலையில் தேசிய மற்றும் விளையாட்டு கொடிகளை ஏற்றி வைத்து, ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து போட்டிகளை துவக்கி வைத்தார்.
மேலும், வண்ண பலூன்கள் மற்றும் வெண் புறாக்கள் பறக்க விட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்கள். 100மீ ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஓட்டப்பந்தய போட்டிகளை கொடியசைத்து துவக்கி வைத்து, வெற்றி பெற்றவர்களை பாராட்டி பதக்கம் மற்றும் கேடயங்களை அமைச்சர் வழங்கினார்.இவ்விழாவில் 21 சிறப்பு பள்ளிகளில் இருந்து 800 மாணவ மாணவிகள், தொண்டு நிறுவனங்கள், தாளாளர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர். 19 வகையான விளையாட்டுப் போட்டிகள் ஆண், பெண் இரு பிரிவினராக நடத்தப்பட்டது.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சிறப்பு பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.
இப்போட்டிகளில் விஷயலம் சிறப்புப் பள்ளி, ஃப்யித் சிறப்பு பள்ளி, சான் கல்ப் சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கான சங்கல்ப் கற்றல் மையம், ஜெயம் சிறப்புப் பள்ளி, அரவிந்த் அறக்கட்டளை, சத்யலோக் சிறப்பு பள்ளி, ஹோப் இ.ஐ.சி ஆட்டிசத்திற்கான நம்பிக்கை, ஜீவன் சிறப்புப் பள்ளி, பாலவிஹார், எட்வின் சிறப்புப் பள்ளி, அன்பு மலர் சிறப்புப் பள்ளி, கிரேசி சிறப்புப் பள்ளி, ராஸ் சிறப்புப் பள்ளி, ஹோப் சிறப்புப் பள்ளி, கார்மல் சிறப்புப் பள்ளி, மதர் தெரசா ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு அனைவருக்கும் சமவாய்ப்பு என்ற கொள்கையை வலியுறுத்துகிறது. நாம் சேர்ந்து ஒரு தடையற்ற உலகை உருவாக்க வேண்டும் என்பதையும் உறுதி செய்கிறது.
இதில் ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், தனியார் கல்லூரி செயலாளர் ஹென்றி மாரிஸ், கல்லூரி முதல்வர் மேரி ஏஞ்சலின் சந்தோஷம், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் வீராங்கனைகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

