300 விவசாயிகள் 594.91 ஹெக்டர் பயிர் காப்பீடு…மாவட்ட ஆட்சியர் பிரதாப் தகவல்!
நவரை பருவ நெல், ரபி பருவ தர பயிர்களுக்கு 300 விவசாயிகள் 594.91 ஹெக்டர் காப்பீடு செய்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் 2 விவசாயிகளுக்கு நுண்ணூட்ட உரம், நெல் விதைகளையும், இரண்டு விவசாயிகளுக்கு தென்னை நாற்றுகள் என நான்கு விவசாயிகளுக்கு மானியத்தில் இடுபொருட்கள் வழங்கினார். பின்னர் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அவர்கள் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2024-25ம் ஆண்டு சம்பா நெற்பயிருக்கு தற்பொழுது 3352 விவசாயிகளுக்கு ரூ.7.81 கோடி இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. நவரை பருவ நெல், ரபி பருவ தர பயிர்களுக்கு 300 விவசாயிகள் 594.91 ஹெக்டர் காப்பீடு செய்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதில் இணை இயக்குநர்கள் கலாதேவி(வேளாண்),ஜெயந்தி (கால்நடை பராமரிப்பு), வேளாண் பொறியியல் செயற்பொறியாளர் கணேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) நிர்மலா, தோட்டக்கலை துணை இயக்குநர் (பொ) கோமதி, வேளாண்மை உதவி இயக்குநர் ரமேஷ், அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.