ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு ஜி.எஸ்.டி,வருமான வரி தொழில்நுட்ப பயிற்சி!

Loading

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஜி.எஸ்.டி மற்றும் வருமான வரி தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது தாட்கோ சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஜி.எஸ்.டி மற்றும் வருமான வரி தொழில்நுட்ப பயிற்சி, தொழில் உற்பத்தி பயிற்சி, டிஜிட்டல் திறன்களில் ஐடிஇஎஸ் மற்றும் பிப்பிஓ பயிற்சி யூலை,யூஎக்ஸ் இணைய தொழில்நுட்ப பயிற்சி, டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களாகவும், 21 முதல் 30 வயது வரை உள்ளவர்களாகவும், 2021 ஆம் ஆண்டு முதல் 2024 ஆண்டு வரையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு வழிவகை செய்யப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

இப்பயிற்சிக்கான கால அளவு 55 நாட்கள் ஆகும்.மேலும் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலம் வழங்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

0Shares