100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு ரூ.17 சம்பளம் உயர்வு!
![]()
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.17 கூடியிருக்கிறது.அதாவது ரூ.319-ல் இருந்து ரூ.336 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என்ற 100 நாள் வேலை திட்டம் கிராமப்புற மக்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்வதற்காக மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 11 கோடியே 92 லட்சம் பேர்தொழிலாளர்களாக பதிவு செய்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை இந்த திட்டத்தின் கீழ் 88 லட்சத்து 16 ஆயிரத்து 448 பேர் உள்ளனர்.
மேலும் அந்த மாநிலத்தின் நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில் இந்த தொழிலாளர்களுக்கு, சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் தற்போது 2025-26-ம் நிதியாண்டிற்கான சம்பளத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் ஒரு நாள் சம்பளம் ரூ.17 கூடியிருக்கிறது.அதாவது ரூ.319-ல் இருந்து ரூ.336 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் ஒவ்வொரு மாநிலத்திற்கும் புதிய சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு கடந்தாண்டு மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்திற்காக ஒதுக்கிய சம்பளம் போக, பொருட்கள் வாங்கியதற்கு வழங்க வேண்டிய ரூ.1,400 கோடியை நிலுவை வைத்து உள்ளது.இந்தநிலையில் விரைவில் இந்த தொகை விடுவிக்கப்பட உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதேபோல பல்வேறு மாநிலங்களுக்கும் நிலுவைத்தொகை வழங்க வேண்டியுள்ளது. இந்தாண்டு தமிழகத்துக்கு முதல்கட்டமாக சம்பளத்திற்கு வழங்க வேண்டிய ரூ.920 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது என்பது குறிப்பிடக்கத்தக்கது.

