சுதந்திர போராட்ட வீரர் திரு.வ.வே.சுப்பிரமணிய ஐயர் அவர்கள் நினைவு தினம்!.
சுதந்திர போராட்ட வீரர், வீர வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியளித்தவர் மற்றும் தமிழ் நவீன சிறுகதை தந்தை திரு.வ.வே.சுப்பிரமணிய ஐயர் அவர்கள் நினைவு தினம்!.
சுதந்திர போராட்ட வீரரும், தமிழ் நவீன சிறுகதையின் தந்தை எனவும் போற்றப்பட்ட வ.வே.சு. ஐயர் (வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர்) 1881ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள வரகனேரியில் பிறந்தார்.
இவர் 1907ஆம் ஆண்டு லண்டன் சென்றபோது சுதந்திர புரட்சி வீரர்களின் தொடர்பு மூலம், அவர்கள் ரகசியமாக நடத்தி வந்த அபிநவ பாரத் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார்.
இவர் பட்டமளிப்பு விழாவில் பிரிட்டிஷ் ராஜ விசுவாச பிரமாணம் எடுத்துக் கொண்டால்தான், பட்டம் வழங்கப்படும் என்பதால் அந்த உறுதிமொழியை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார். அதனால் அவரைக் கைது செய்ய ஆங்கில அரசு ஆணையிட்டது. வ.வே.சு சீக்கியர் போல் வேடம் பூண்டு பிரான்ஸ் சென்றார்.
1910 அக்டோபர் 9ல் வ.வே.சு. புதுச்சேரி வந்தார். ஸ்ரீ அரவிந்தர், பாரதியார், நீலகண்ட பிரம்மச்சாரி ஆகியோருடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். இவர் காந்தியால் கவரப்பட்டு அகிம்சவாதியாக மாறினார்.
இவர் குளத்தங்கரை அரசமரம், மங்கையர்க்கரசியின் காதல், ‘கம்பராமாயணம் – எ ஸ்டடி’, மாஜினியின் வாழ்க்கை வரலாறு, நெப்போலியனின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார்.
தமிழ் நவீன சிறுகதையின் தந்தை என்று போற்றப்படும் இவர் தன்னுடைய 44வது வயதில் 1925ஆம் ஆண்டு ஜுன் 4 ஆம் தேதி அன்று மறைந்தார்.