கொடிக்கம்பம் நடுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்..ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு!

Loading

திருப்பூர் கொடிகாத்த குமரன் சுதந்திர போராட்டத்தை வலியுறுத்தி கையில் தான் கொடிகளை ஏந்தி சென்றார் என்றும் எந்த தெருவிலும் சாலையிலும் நட்டு வைக்கவில்லை.எனவே சாலையோரம் கொடிக்கம்பம் நடுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து மதுரையை சேர்ந்த அமாவாசை என்பவர் , ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறியிருப்பதாவது:-மதுரை விளாங்குடி பகுதியில் அ.தி.மு.க. கொடிக்கம்பத்தை சாலையோரம் நட்டு வைக்க அனுமதி கேட்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது என்றும் அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தனி நீதிபதி, தமிழகத்தில் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சி, சாதி, மத மற்றும் பிற அமைப்புகளின் நிரந்தர கட்சி கொடிக் கம்பங்களை அகற்றவும், அரசியல் கட்சியை சேர்ந்தவர்களோ, சாதி, மத அமைப்பினரோ அவர்களுக்கு சொந்தமான இடங்களில் முறையாக அனுமதி பெற்று நிரந்தரமாக கொடி கம்பங்களை வைத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் தமிழக அரசு தனியார் நிலங்களில் கொடிக்கம் பங்களை வைப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். மேலும் இந்த உத்தரவு சட்டவிரோதமானது என்றும் ஆகவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து சாலைகளில் கொடி மரங்கள் வைக்க கட்சிக்கொடி ஏற்ற அனுமதித்து உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் அந்த கூறியிருந்தார்.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தனிநீதிபதியின் உத்தரவில் என்ன தவறு உள்ளது? சம்பந்தப்பட்டவர்கள் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் வைத்துக் கொள்ளட்டும் என்றனர்.

அதன் பின்னர் மாநில தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் உள்ளன என்றும் சாலையோரங்களில் கட்சி கொடி மரங்கள் அமைப்பதை அரசியல் கட்சிகள் தங்களின் ஜனநாயக உரிமையாக பார்க்கப்படுகிறது என்றும் இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் கட்சி கொடி மரங்கள் வைக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்க கூடாது என வாதாடினார்.

அதனை தொடர்ந்து விசாரணை முடிவில், தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளில் கட்சி கொடிகள் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதால் அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுவதை நாங்கள் உணர்ந்து உள்ளோம் என்றும் எனவே சாலைகள் என்பது தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும் என்றும் இதுபோன்று கட்சி கொடி கம்பங்கள் நிறுவப்படுவதால் போக்குவரத்து தடை ஏற்படுகிறது. எனவே ஒருபோதும் இதை அனுமதிக்க மாட்டோம் என்றும் மேலும் சட்ட விதிகளின்படி பொது இடங்களில் அரசியல் கட்சிகளுக்கோ அல்லது அமைப்புகளுக்கோ அனுமதி வழங்க அரசுக்கு அதிகாரமில்லை என்றும் இந்த விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரி தான் என கூறினார்.

மேலும் திருப்பூர் கொடிகாத்த குமரன் சுதந்திர போராட்டத்தை வலியுறுத்தி கையில் தான் கொடிகளை ஏந்தி சென்றார், எந்த தெருவிலும் சாலையிலும் நட்டு வைக்கவில்லை என்றும் இதனை ஜனநாயக உரிமையாக பார்க்க முடியாது என்றும் இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

0Shares