திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பேரவையை 6 மாதத்திற்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பது விதி. இதன்படி 6 மாத காலம் முடிவடைய உள்ளதால், புதுச்சேரி சட்டப்பேரவை காலை 9.30 மணிக்கு கூடியது, சபாநாயகர் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கினார். முதலாவதாக சபையில் மறைந்த ராணி எலிசபெத்துக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் சிவா எழுந்து, ஒன்றிய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார். அதனை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றாக வலியுறுத்தினர். மேலும், மாநில அந்தஸ்து விவாகரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை பேரவையில் தெரிவிக்க வேண்டும் எனவும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தினார். தொடர்ந்து மாநில அந்தஸ்து தீர்மானம் நிறைவேற்றக்கோரி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் கண்டன முழக்கங்களை எழுப்பிய நிலையில், இது குறித்து பேரவையில் பேச மறுத்ததாலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாத அரசை கண்டித்தும் பேரவையில் இருந்து எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.எச்.எம். நாஜிம், வி. அனிபால் கென்னடி, லீ. சம்பத், செந்தில்குமார், நாக தியாகராஜன் மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பாத் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் வௌிநடப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா, புதுச்சேரியில் பல்வேறு பிரச்சனைகள் பேசப்பட வேண்டியவை. குறுகியகால கூட்டத்தொடர் என்றாலும் முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு அனுமதியில்லை. புதுச்சேரியில் உள்ள கல்வி நிலையங்கள் அனைத்தும் ஆளும் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் அதிகாரிகள் கையில் முழுக்க உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகாலமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை, புத்தகம், சைக்கிள், உதவித் தொகை வழங்கப்படவில்லை. இதையெல்லாம் தாண்டி மாணவர்களுக்கு நல்ல உணவு கொடுக்கல. அட்சயப்பாத்திரம் திட்டம் என்கிறார்கள். ஆனால் பூண்டு, வெங்காயம் இல்லாமல், காலம்காலமாக பாரம்பரிய உணவை மாற்றி குழந்தைகளுக்கு வழங்குகிறார்கள். இதனை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் குறையாக கூறுகின்றனர். அதை இந்த அரசு திருத்திக்கொள்ளவில்லை. மாணவர்களுக்கு உணவு இலவசமாக வழங்கப்படுவதாக கூறுகிறார்கள். அது முற்றிலும் தவறானது. இது புதுச்சேரி மட்டுமல்ல இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்கள் மூலம் பணம்பெற்று தான் நடக்கிறது. இதற்கு ஆர்.எஸ்.எஸ் பின்புலமாக இருக்கிறது. அதேபோல் முட்டை போடாமல் இருந்தனர். நாங்கள் குரல் கொடுத்தோம். போடுவதாக பாவலா காட்டினார்கள். அதுவும் இன்னும் முழுமையாக வழங்கப்பட வில்லை. அரசுப் பள்ளிகளில் அடிப்படையாக ஆசிரியர் பற்றாக்குறை, வகுப்பறை பற்றாக்குறை இருந்தாலும், காலம்காலமாக கொடுக்க வேண்டியதை இந்த அரசு கொடுக்கவில்லை. அதனைக் கண்டித்து தான் திமுக வௌிநடப்பு செய்துள்ளது. ஏ.எப்.டி . சீருடை தயாரிப்பை நினைவுபடுத்துகின்ற வகையில் பஞ்சாலைகள் மூடியுள்ளதை சுட்டிக்காட்டி உள்ளோம். மாநில அந்தஸ்து கோரி கடந்த காலங்களில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் ரங்கசாமி இதுவரை ஒருமுறை கூட தீர்மானம் போடவில்லை. ஆனால் மாநிலத்தில் எப்போதெல்லாம் பிரச்னை வருகிறதோ அப்போதெல்லாம் மாநில அந்தஸ்தை கையில் எடுப்பதும், அதற்காக சில அமைப்புகளை ஒன்றிணைப்பதும் சரியல்ல. ஒன்றியத்தில் உங்கள் ஆட்சி இருக்கிறது. கேட்டு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை, அனைத்துக் கட்சித் தலைவர்களை டெல்லி அழைத்துச் சென்று வலியுறுத்த வேண்டும். கடந்த காலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மாநில அந்தஸ்து வேண்டுமென்று திமுக ஆட்சிகாலத்தில் முன்னாள் முதல்வர் ஆர்.வீ. ஜானகிராமன் தலைமையிலான அரசு தீர்மானம் போட்டது. அதோடு நிறுத்தவில்லை முன்னாள் முதல்வர்கள், சட்டமன்ற உறுப்பினர்களையெல்லாம் டெல்லிக்கு அழைத்துச் சென்று அன்றைய ஒன்றிய அரசை வலியுறுத்தியதோடு மட்டுமல்லாமல் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து பேசினோம். இதெல்லாம் வரலாறு. அதேபோல் தொடர்ந்து வந்தவர்கள் முயற்சி செய்திருந்தால் கிடைத்திருக்கும். ஆனால் அந்த எண்ணம் இல்லை.
மாநில வளர்ச்சிக்கு, சுதந்திரமாக செயல்பட்டு மக்களுக்கு நல்லது செய்வதற்கு மாநில அந்தஸ்து கேட்கிறார்கள். அது நியாயம் தான். ஆனால் கேடு விளைவிக்கக் கூடிய எல்லா விஷயமும் மாநில அந்தஸ்து இல்லாமல் நடக்கிறது. மின்துறையை தனியார்மயமாக்குவது, காரைக்கால் துறைமுகத்தை தனியாருக்கு தாரைவார்ப்பது, அட்சயபாத்திரம் திட்டமானாலும் சரி, மூடிய ரேஷன் கடைகளை திறப்பதற்கு அரசின் முடிவை எதிர்பார்த்து இருக்கின்ற மோசமான நிலை இருக்கிறது. இந்தியாவிலேயே ரேஷன் கடை இல்லாத மாநிலமாக புதுச்சேரி இருக்கிறது. ஒன்றிய அளவில் விளையாட்டை ஊக்குவிக்க மாநில தலைநகரம் மட்டுமல்லாது, மாவட்டம்தோறும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கபட்டு வருகின்றன. ஆனால் புதுச்சேரியில் இரண்டு மைதானங்கள் தவிர வேறெங்கும் மைதானம் இல்லை. கிராமப்புறங்களில் உள்ள ஓரிரு பள்ளிகளில் சிறிய அளவில் மைதானங்கள் உள்ளதே தவிர முறையாக எங்கும் மைதானம் இல்லை. இதனால் பயிற்சி கொடுக்க வழியில்லை. தொழிற்கூடமெல்லாம் சாத்தி இருக்கிறது. புதிய தொழிற்கொள்கை இல்லை. இதையெல்லாம் பேசுவதற்கு பேரவையில் அனுமதி மறுக்கப்படுகிறது. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து அவரவர் தொகுதியில் உள்ள பிரச்சனைகள் குறித்து கேட்டறியவது இல்லை. சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி கூட ஒழுங்காக வழங்காத அரசாங்கமாக இந்த அரசாங்கம் இருக்கிறது. உள்ளாட்சித்துறையில் உள்ள ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை. ஏறக்குறைய 19 அரசு சார்பு நிறுவனங்களுக்கு சம்பளம் போடல. இப்படி பல பிரச்சனைகள் இருந்தாலும் அதையெல்லாம் மறைத்து இந்த அரசாங்கம் செயல்படுகிறது. சமீபத்தில் ஜீ–20 மாநாடு நடத்தப்பட்டது. அது தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். அப்போது தான் சாலைகள் மேம்படும். புதுச்சேரி நகரம் பொலிவு பெரும் என்ற நிலை உள்ளது. ஒரு வாரத்தில் 10 சாலைகள் மேம்படுத்த முடிந்த இந்த அரசாங்கத்தால் சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகளை சரிசெய்து கொடுக்கவோ, சாலைபோடவோ முன்வருவதில்லை. புதுச்சேரி நகரம் மின்னொலியில் ஜொலித்தது. இதற்கெல்லாம் எங்கிருந்து பணம் வந்தது என்று தெரியவில்லை. இதற்கு எத்தனை கோடி செலவு செய்தது என்று கணக்கு கேட்க வேண்டும். இதையெல்லாம் கண்டித்து தான் திமுக இன்று வௌிநடப்பு செய்துள்ளது என்றார். மேலும் காரைக்கால் பகுதியில் மழையால் சேதமடைந்த பகுதிகளை கமிட்டி அமைத்து பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று நாஜிம் எம்.எல்.ஏ . கோரிக்கை வைத்தார். அதையும் இந்த அரசாங்கம் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. மாநில அந்தஸ்தில் திமுகவின் நிலை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது என்றும் இது பாஜக உள்ளிட்ட அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணமாக உள்ளது என்றும் இதில் எந்த குழப்பமும் தேவையில்லை என்றார். மேலும் மாநில அந்தஸ்தில் இரண்டு முகம் யாருக்கும் இல்லை. அனைவருக்கும் ஒரே முகம் தான். ஏற்கனவே எங்கள் கழகத் தலைவர், தமிழக முதல்வர் மூலம் நாடாளுமன்றத்தில் எங்கள் கட்சி எம்.பி .அண்ணன் திருச்சி சிவா அவர்கள் புள்ளி விபரமாக எடுத்துறைத்துள்ளார். தொடர்ந்து எங்கள் கழகத் தலைவர் வழிகாட்டுதலோடு எம்பி–க்கள் குரல் கொடுப்பார்கள். அதற்காக எங்கள் தலைவரிடம் நாங்கள் வலியுறுத்துவோம். தொடர்ந்து முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலை வைப்பது குறித்த கேள்விக்கு, கடந்த ஆட்சியாளர்களும் சரி, தற்போதைய ஆட்சியாளர்களும் சரி தலைவர் கலைஞர் அவர்களுக்கு சிலை வைப்பதற்கான எந்த பணியையும் தொடங்கவில்லை. இந்த மண்ணிற்காக, தமிழ் மொழிக்காக, இணைப்புப் போராட்டத்திற்கு எதிராக நின்ற கலைஞர் அவர்களுக்கு புதுச்சேரி அரசு விரைவாக சிலை வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் பிசிஎஸ் அதிகாரியைக் கூட மாற்றம் செய்ய முதல்வருக்கு அதிகாரம் இல்லை என்றால் அந்த பதவியில் இருக்கலாமா என்று அவர்தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேட்டியளித்தார்.இதனிடையே அரசின் கூடுதல் செலவினங்களுக்கு பேரவையில் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் பேரவையை கால வரையின்றி ஒத்தி வைத்து அறிவித்தார் சபாநாயகர் செல்வம். தொடங்கிய 25 நிமிடத்தில் பேரவை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.