திருவள்ளூரில் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.54,950 மதிப்பில் உதவி உபகரணங்கள்
திருவள்ளூர் ஜன 10 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 89 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 43 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 24 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 56 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 86 மனுக்களும் என மொத்தம் 298 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், கால் பாதிக்கப்பட்ட 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.9,050 வீதம் ரூ.27,150 மதிப்பீட்டிலான மூன்று சக்கர சைக்கிள்;களையும், காது கேளாத 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.2,780 வீதம் ரூ.27,800 மதிப்பீட்டிலான காதொலி கருவிகளையும் என 13 மாற்றுத்திறனாளிகளுக்கு மொத்தம் ரூ.54,950 மதிப்பீட்டிலான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், உதவி ஆட்சியர் (பயிற்சி) கேத்ரின் சரண்யா,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கா.காயத்திரி சுப்பிரமணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு, பேச்சு பயிற்சியாளர் சுப்புலட்சுமி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.