10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜொலிக்கிறது திருவண்ணாமலை.

Loading

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சாத்தனூர் அணையில் தேசியக்கொடி வண்ணத்தில் மின்விளக்குகள் பொருத்தம்
10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜொலிக்கிறது திருவண்ணாமலை, டிச.4: மாலை நேரத்திலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சாத்தனூர் அணையில் தேசியக்கொடி வண்ணத்தில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜொலிக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குவது சாத்தனூர் அணையாகும். பொங்கல் தீபாவளி விடுமுறை தினங்களில் ஆயிரக்கணக்கானேர் குடும்பத்தினருடன் வந்து ஆதாம் ஏவாள் பூங்கா, ராக்கெட் பார்க், காந்தி மண்டபம், வீரமங்கை பார்க், கலர் மீன் கண்காட்சி, தொங்கு பாலம், முதலைப் பண்ணை, டைனோசர் பார்க், தாஜ்மஹால் பகுதி சுற்றிப் பார்த்து பொழுதை கழித்து செல்கின்றனர். தற்போது பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 1,580 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணையில் 117 அடியாக நீர்மட்டம் உள்ளது. நீர் மின்சாரம் தயாரிக்கக் கூடிய வழியாக ஆயிரம் கன அடி தண்ணீரும் 9 கண் மதகு வழியாக 1100 கன அடி தண்ணீரும் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டு வருகிறது. மாலையிலும் சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக பொதுப்பணித் துறை மூலம் சாத்தனூர் அணையின் 9 கண் மதகு பகுதியில் தேசியக் கொடி வண்ணத்தில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. அணை பூங்கா பகுதியில் இந்த மின்விளக்குகள் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் வண்ண மின் விளக்குகள் பொருத்தப்பட்டு பின்னர் பழுதடைந்துள்ளது. தற்போது மீண்டும் வண்ண மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால் சாத்தனூருக்கு இனிவரும் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் மாலை நேரங்களிலும் அணையை சுற்றிப் பார்க்க வருவார்கள் என்று பொதுப்பணித்துறை ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.வரும் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை திருவண்ணாமலை தீபவிழாவுக்கு 24 சிறப்பு ரயில்கள் உட்பட 63 ரயில்கள் இயக்கம்
மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தகவல்
திருவண்ணாமலை, டிச.4: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தால் வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் தென்னக ரயில்வே சார்பில் நாளை 5ம்தேதி முதல் 8ம் தேதி வரை 24 சிறப்பு ரயில்கள் உட்பட 63 ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
அதன்படி நாளை 5ம்தேதி முதல் 8ம் தேதி வரை 4 நாட்களுக்கு சென்னை கடற்கரையில் ரயில்வே நேரப்படி 18 மணிக்கு புறப்படும் ரயில் 00.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். தொடர்ந்து திருவண்ணாமலையில் 3.45 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரையை 9.05 மணிக்கு சென்றடையும். அதன்படி சுழற்சி முறையில் வேலூர், கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணிசாலை, போளூர், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இதேபோல் நாளை (5ம் தேதி) முதல் 8ம் தேதி வரை 4 நாட்களுக்கு புதுச்சேரியில் 19.45 மணிக்கு புறப்படும் ரயில் திருவண்ணாமலையை 22.30 மணிக்கு சென்றடையும். தொடர்ந்து திருவண்ணாமலையில் 3.30 மணிக்கு புறப்பட்டு 6.20க்கு மீண்டும் புதுச்சேரி சென்றடையும். இதன் மூலம் விழுப்புரம் இணைப்பு, வெங்கடேசபுரம், மாம்பழம்பட்டு, ஆயத்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக6சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
மேலும் 6, 7ம் தேதிகளில் 2 நாட்களுக்கு மயிலாடுதுறையில் இருந்து 6 மணிக்கு புறப்படும் ரயில் 10.55 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும். பின்னர் அந்த ரயில் 12.40க்கு புறப்பட்டு 17.40க்கு மீண்டும் மயிலாடுதுறை செல்லும். இதனால் விழுப்புரம் இணைப்பு, வெங்கடேசபுரம், மாம்பழம்பட்டு, ஆயத்தூர், திருக்கோவிலூர், ஆத்ச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இதேபோல் 6,7ம் தேதிகளில் திருச்சிராப்பள்ளியில் இருந்து 15.45 மணிக்கு புறப்படும் ரயில், 00.40 மணிக்கு வேலூர் சென்றடையும், அங்கிருந்து 1.30 மணிக்கு புறப்பட்டு 10.45 மணிக்கு திருச்சிராப்பள்ளி சென்றடையும். அதன்படி திருப்பாத்திரி புலியூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விழுப்புரம் இணைப்பு, வெங்கடேசபுரம், மாம்பழம்பட்டு, திருக்கோவிலூர், திருவண்ணாமலை, போளூர், ஆரணி வழியாக 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். சென்னை தாம்பரத்தில் இருந்து 6, 7ம் தேதிகளில் 2 நாட்களுக்கு 8.40 மணிக்கு புறப்படும் ரயில் 12.15 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும். மீண்டும் அந்த ரயில் 13.45 மணிக்கு புறப்பட்டு, 17.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இதன்படி செங்கல்பட்டு, மதுராந்தகம், மேல்மருத்வத்தூர், திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூர் வழியாக 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். 24 சிறப்பு ரயில்கள் உட்பட 63 ரயில்கள் திருவண்ணாமலை தீபவிழாவுக்கு இயக்கப்படுவதால் பொதுமக்கள் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். மேலும் ரயில்கள் இயக்கப்படும் நேரத்துக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவின் 7ம் நாள் மகா தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என முழக்கம் விண்ணை பிளந்தது
திருவண்ணாமலை, டிச.4- திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் பிரசித்திபெற்ற மகா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி முழக்கம் விண்ணை பிளக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேரோட்டத்தையட்டி 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடந்து வருகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழா உற்சவத்தில் தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரரும், இரவில் பஞ்சமூர்த்திகளும் பல்வேறு வாகனங்களில் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றர். அதன்படி 6ம் நாளான  வெள்ளி அன்று இரவு வெள்ளி தேரோட்டம் நடந்தது. திருக்கல்யாண மண்டபத்தில் அலங்காரம், தீபாரதனை முடிந்ததும், திட்டி வாசல் வழியாக ராஜகோபுரம் எதிரில் இரவு 10 மணியளவில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். பின்னர், வெள்ளி விமானத்தில் விநாயகரும், வெள்ளி விமானத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும், வெள்ளித்தேரில் உண்ணாமுலையம்மன் சமேத அண் ணாமலையாரும், இந்திர விமானத்தில் பராசக்தி அம்மனும், வெள்ளி விமானத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதியில் பவனி வந்தனர்.
அதைத்தொடர்ந்து விழாவின் 7ம் நாளான நேற்று காலை மகா தேரோட்டம் எனப்படும் பஞ்சரதங்கள் பவனி தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர். இதை முன்னிட்டு தேரடி வீதியில் நிலையில் நிறுத்தியுள்ள பஞ்ச ரதங்களுக்கும் சலசங்கள் பொருத்தும் பணி நடந்தது. மேலும் பஞ்ச ரதங்களும் மறுசீரமைப்பு செய்யப்பட்டு. அதன் உறுதித் தன்மையும் ஏற்கனவே சரிபார்க்கப்பட்டுள்ளது. முற்றிலுமாக சீரமைக்கப்பட்ட சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டமும் நடந்து முடிந்தது. மேலும், தேரோடும் மாடவீதியில் சாலை சீரமைப்பு, ஆக்கிமிப்புகள் அகற்றம், மின்வயர்கள் குறுக்கீடு அகற்றம் போன்ற பணிகள் நிறைவேற்றப்பட்டு, தேரோட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் நடைதிறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், பன்னீர் உள்பட பல்வேறு பொருட்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதை தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளிதெய்வானை சமேத சுப்பிரமணியர், அண்ணாமலையார் பிரியாவிடை, உண்ணாமுலையம்மன், சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். இதையடுத்து மகாதேரோட்டம் தொடங்கியது. முதல் தேராக விநாயகர் தேர் மாடவீதியில் பவனி வந்தது. இதையட்டி விநாயகர் திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து விநாயகர், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 6.20 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாடவீதியை சுற்றிவந்த விநாயகர் தேர் நிலையை அடைந்ததும், 2வதாக காலை 10.35 மணிக்கு சுப்பிரமணியர் தேரோட்டம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, மாலை 4 மணி அளவில் அண்ணாமலையார் பிரியா விடை அருள்பாலிக்கும் பெரிய தேர் எனப்படும் ‘மகா ரதம்’ புறப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் “அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா’ என விண்ணதிர முழக்கமிட்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். மகா ரதம் நிலையை அடைந்ததும், பராசக்தி அம்மன் தேர் புறப்பாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மன் தேரை ஆயிரக்கணக்கான பெண்கள்  மட்டுமே வடம் பிடித்து இழுத்துச்சென்றனர்.
தேரோட்டத்தின் நிறைவாக, சண்டிகேஸ்வரர் தேர் பவனி நடைபெற்றது. இரவு நேரத்தில் தேரோட்டம் நடத்துவது தொடர்பாக ஏற்கனவே அரசின் தடை இருந்ததால் பஞ்ச ரதங்களின் பவனியை இரவு 9.30 மணியளவில் நிலையை அடைந்தது. தேரோட்டம் காரணமாக நகருக்குள் கனரக வாகளங்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அதற்கு மாற்றாக புறவழி சாலையில் களரக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டது. அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்தையட்டி பாதுகாப்புக்காக 2 தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ குழுவினருடன் கூடிய 4 ஆம்பு லன்ஸ் வாகனங்கள் ஆகியவை மகா ரதத்தை பின்தொடர்ந்து சென்றது. தேர் சக்கரங்களுக்கு கட்டைப் போடும் சேவை பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, ஒரே மாதிரியான சீருடை (டி-சர்ட்) வழங்கப்பட்டிருந்தன. அதோடு, அவர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் காப்பீடும் செய்யப்பட்டிருந்தது. தேர் சக்கரங்களை சுற்றிலும் 20 மீட்டர் இடைவெளி வரை பக்தர்கள் யாரும் செல்லாதபடி, போலீஸ் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல் தேரேட்டத்தின்போது, கூட்ட நெரிசலில் திருட்டு, செயின் பறிப்பு போன்றவற்றை கண்காணிக்க 162 இடங்களில் சிசிடிவி கேமராக்கள், 22 இடங்களில் அதிநவீன சுழலும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
கார்த்திகை தீபத்திருவிழாவையட்டி கிரிவலப் பாதையில் நெடுஞ்சாலை துறை மூலம்  பக்தர்களின் வசதிக்காக ரூ.1.20 கோடியில் கட்டப்பட்டுள்ள  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு
திருவண்ணாமலை, டிச.4- கார்த்திகை தீபத்திருவிழாவையட்டி திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நெடுஞ்சாலை துறை மூலம் பக்தர்களின் வசதிக்காக 8 இடங்களில் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்களை அமைச்சர் எ.வ.வேலு நேரில் நேற்று ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடந்து வருகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். தீபத்திருவிழாவின் முக்கிய விழாவான வருகிற 6ந் தேதி பரணி தீபமும் மகாதீபமும் நடைபெறவுள்ளது. இதில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையட்டி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகாதீபம் அன்று  கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சி.என்.அண்ணாதுரை எம்பி, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், நகரமன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன், கூடுதல் ஆட்சியர் வீர்பிரதாப்சிங் நகராட்சி ஆணையாளர் ரா.முருகேசன் கோவில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், நெடுஞ்சாலை துறை திருவண்ணாமலை வட்ட கண்காணிப்பாளர் பழனிவேல் கோட்ட கண்காணிப்பாளர் க.முரளி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வீ.வெற்றிவேல் மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகரமன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கிரிவல பாதையில் அமைச்சர் எ.வ.வேலு பக்தர்களின் அடிப்படை வசதிகள் குறித்தும் கிரிவலப் பாதையில் 8 இடங்களில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலை துறை மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்களை பக்தர்களின் பயன்பாட்டுக்கு உள்ளதா என ஆய்வு மேற்கொண்ட அவர் அடிஅண்ணாமலை ஊராட்சியில் நெடுஞ்சாலை துறை மூலம் பக்தர்களுக்கான தங்கும் அறை கட்டப்பட்டுள்ளது. அங்கு கார்த்திகை தீபத்தையட்டி அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை மூலம் தற்காலிக மருத்துவமனை அமைத்து கிரிவலம் வரும் பக்தர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படும் இடத்தையும் ஆய்வு மேற்கொண்ட அவர் சாந்திமலை நிறுவனம் அருகே கிரிவலப் பாதையில் நடைபாதையினை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கான நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் நலன் கருதி தற்போது பழுதடைந்துள்ள பகுதிகளில் பேவர் பிளாக் போடவும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *