ஒரிசாவில் இருந்து ரயில் மூலம் கடத்தி வந்த 22 கிலோ கஞ்சா திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் பறிமுதல்
ஒரிசாவில் இருந்து ரயில் மூலம் கடத்தி வந்த 22 கிலோ கஞ்சா திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் பறிமுதல் :
ஒடிசாவை சேர்ந்த 3 இளைஞர்கள் கைது :
திருவள்ளூர் ஜன 23 : திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வாலுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் கண்காணிப்பாளர் ரோஹித்நாதன் ராஜகோபால் மேற்பார்வையில் காஞ்சிபுரம் போதை பொருள் கடத்தல் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் டில்லிபாபு மற்றும் காவல்துறையினர் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்து கொண்டிருந்த மூன்று பேரை மடக்கி சோதனை செய்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் ஒடிசாவை சேர்ந்த பத்மனாபோயி, தனஞ்ஜெய கரியா, ஹரி ஹர பாகா என்பது தெரியவந்தது.
கஞ்சாவை கடத்தி வந்த 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.அப்போது தமிழகத்தில் தொழிற்சாலைகள் நிரம்பிய பகுதிகளான தர்மபுரி திருப்பூர் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.