மகளே, என்னை மன்னித்து விடு..பெண் எடுத்த விபரீத முடிவு!
![]()
திருமணம் செய்வதாக ஏமாற்றிய நகை, பணத்தையும் அபகரித்ததால் மனமுடைந்த பட்டதாரி பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள கூடைத்தூக்கி நாகப்பள்ளிவிளையைச் சேர்ந்த அஜிகுமார் மனைவி ரமணி, இவருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அஜிகுமார் இறந்தநிலையில் வீட்டின் அருகில் சிறிய கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்தநிலையில் ரமணி நேற்று காலையில் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் குலசேகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து ரமணி உயிரிழப்பதற்கு முன்பு எழுதி வைத்த உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
அதில், “எனது கணவர் இறந்த பிறகு அரசு வேலை கேட்டு மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் கருணை மனு கொடுத்தேன். அப்போது அந்த மனுவில் இருந்த எனது செல்போன் எண்ணை எடுத்து அங்கு வருவாய் ஆய்வாளராக பணியாற்றியவர் என்னிடம் அடிக்கடி பேசி தொந்தரவு கொடுத்தார்.
ஒரு கட்டத்தில், தனக்கு திருமணமாகி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு முடிவுக்கு வந்ததும் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசைவார்த்தைகளை அள்ளி வீசினார். இதனை நான் கண்மூடித்தனமாக நம்பி அவர் கேட்ட நகை மற்றும் பணத்தையும் கொடுத்தேன். ஆனால் அவர் எனக்கு தெரியாமல் கடந்த மே மாதம் வேறொரு பெண்ணை மணமுடித்தார். இதனை பற்றி கேட்டதால் அவர் மற்றும் அவருடைய உறவினர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் தற்கொலை முடிவை எடுக்கிறேன்” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.உருக்கமான கடிதத்தில், தன்னுடைய தந்தை, மகளிடம் மன்னிப்பு கேட்டும் எழுதியுள்ளார். அதில், “அப்பா, எனது பிள்ளையை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்.மகளே, என்னை மன்னித்து விடு. உன்னை நல்ல முறையில் வளர்க்க அம்மாவுக்கு ஆசை. ஆனால் இவர்கள் என்னை தொந்தரவு செய்கிறார்கள். என்னால் தாங்க முடியவில்லை” என்று அதில் ரமணி தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார்.
மேலும் இதுகுறித்து ரமணியின் தந்தை ஜார்ஜ் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

