மீனவர்களுக்கு சொன்னீங்களே, செஞ்சீங்களா ? – நயினார் நாகேந்திரன் திமுக அரசுக்கு கேள்வி!
![]()
வாக்குறுதியை மறந்துவிட்டு, மீண்டுமொரு முறை ஆட்சியை மட்டும் பிடிக்கத் திட்டமிடுவது வெட்கக்கேடாக இல்லையா? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,“ஒவ்வொரு ஆண்டும் உரிய வசிப்பிடம் இல்லாமல் புயல்வெள்ளப் பாதிப்பில் சிக்கிக் கொண்டு தவிக்கும் மீனவர்களைப் பாதுகாக்கும் விதமாகக் கடற்கரையோரப் பகுதிகளில் 2 லட்சம் புதிய குடியிருப்புகள் கட்டித்தரப்படும் என்று 2021 தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதி எண் 116 இன்றும் ஞாபகமிருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்,
மேலும் பல நூறு கோடி ரூபாய் செலவில் கடற்கரையோரத்தில் பேனா சிலை அமைக்க ஆர்வம் காட்டிய திராவிட மாடல், நான்கு ஆண்டுகளாகியும் மீனவர்களுக்கென ஒரு வீடு கூட கட்டித்தராதது ஏன்? என கேள்வி எழுப்பிய நயினார் நாகேந்திரன் ,,வாக்குறுதியை மறந்து, மீனவர்களைத் தத்தளிக்கவிட்டு, மீண்டுமொரு முறை ஆட்சியை மட்டும் பிடிக்கத் திட்டமிடுவது வெட்கக்கேடாக இல்லையா?என்று கடுமையாக விமரிசித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ஆட்சி அரியணையைக் கைப்பற்றும் ஆசையில் அளவில்லாமல் வாக்குறுதிகளை அளித்துவிட்டு, ஆட்சிமுடியும் வரை வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வெற்று விளம்பரங்களை மட்டும் ஆரவாரமாக வெளியிடும் திமுக அரசுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமாக முடிவு கட்டுவர் மீனவ பெருமக்கள்” என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

