‘நகைச்சுவை நடிகர்’கலைவாணர் திரு.N.S.கிருஷ்ணன் அவர்கள் நினைவு தினம்!
தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 1908ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி நாகர்கோவிலில் பிறந்தார்.
இவர் ஒரு நாடக கொட்டகையில் சோளப்பொரி, கடலை மிட்டாய், முறுக்கு ஆகியவற்றை விற்பனை செய்து வந்தார். அப்பொழுது நாடகத்தின் மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டது. மகனின் ஆர்வத்தைக் கண்ட இவருடைய தந்தை இவரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்த்துவிட்டார். இவர் பல நாடக கம்பெனிகளில் பணியாற்றினார்.
இவர் பல நாடகங்களை எழுதி இயற்றியுள்ளார். இவர் திரையுலகில் கொடிகட்டிப் பறந்தபோதும் நாடகம் மீதுள்ள ஈர்ப்பு இவருக்கு குறையவில்லை. இவரது திரையுலக வாழ்வைத் தொடங்கிவைத்த படம் ‘சதிலீலாவதி’. சார்லி சாப்ளினுடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு, ‘சாப்ளினை ஆயிரம் துண்டு போட்டாலும் அதில் ஒரு துண்டுக்குகூட நான் ஈடாக மாட்டேன்’ என்று தன்னடக்கத்துடன் கூறினார்.
குறுகிய காலத்தில் சுமார் 150 திரைப்படங்களில் நடித்தவர். 1947ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணி நடராஜா கல்விக் கழகம் சார்பில் இவருக்கு ‘கலைவாணர்’ பட்டம் வழங்கப்பட்டது.
நகைச்சுவையில் புரட்சியை ஏற்படுத்திய கலைவாணர் தனது 48வது வயதில் 1957 ஆகஸ்ட் 30 ஆம் தேதி அன்று மறைந்தார்.