ஓடிப் போறேன் தேடாதீங்க’ – காத்திருந்த தந்தைக்கு அதிர்ச்சி கொடுத்த மகள்!
ஓடிப் போறேன்… என்னை தேடாதீங்க என மாணவி தான் மெசேஜ் அனுப்பினாரா அல்லது மாணவியின் பெயரில் வேறு யாரேனும் அனுப்பினார்களா என்ற கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு வயது 19. இளைய மகளுக்கு வயது 15. மூத்த மகள் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் படிப்பில் சேர்ந்து படித்து வந்தார் . தற்போது 2-ம் ஆண்டு படித்து வரும் அவர் விடுமுறையில் அவ்வப்போது அவர் ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.
இந்தநிலையில் கடந்த 21-ந்தேதி தனது தந்தையின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட அந்த மாணவி தனக்கு 20 நாட்கள் கல்லூரி விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும், ஊருக்கு புறப்பட்டு வருவதாகவும் கூறினார். தனது மகளுக்கு வாய்க்கு ருசியாக விடுமுறை நாட்களில் சமைத்துக்கொடுக்க வேண்டும் என்ற ஆசையோடு மகளின் வருகைக்காக அவருடைய பெற்றோர் காத்திருந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த தொழிலாளியின் செல்போனுக்கு தனது மகளின் செல்போனில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், “என்னை தேடாதீர்கள். நான் லவ் பண்ணும் பையன் கூட ஓடிப்போறேன். என்னை தேடி வராதீங்க. உங்களுக்கு தான் காசு வேஸ்ட். நீங்க யாரும் எனக்கு வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த தொழிலாளியும், அவருடைய குடும்பத்தினரும் மகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த தொழிலாளி அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர். அந்த குறுஞ்செய்தியை மாணவி தான் அனுப்பினாரா அல்லது மாணவியின் பெயரில் வேறு யாரேனும் அனுப்பினார்களா என்ற கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.