அஜித்குமார் கொலை வழக்கு..அதிகாரிகளுக்கு தொடர்பா?ஐகோர்ட்டு போட்ட உத்தரவு!
அஜித்குமார் கொலை வழக்கில் பல்வேறு கட்ட விசாரணை முடிந்தபோதும் மேலும் பல கேள்விகள் குறித்தும் விரிவாக விசாரிக்கப்பட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது..
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் நகை திருட்டு புகாரில் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ஆகஸ்டு 20-ந்தேதிக்குள் குற்றப்பத்திரிகையை மதுரை மாவட்ட கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என சி.பி.ஐ.க்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து அஜித்குமார் மரணம் தொடர்பான விசாரணையை தீவிரமாக சி.பி.ஐ. விசாரித்து குற்றப்பத்திரிகையை மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்தது. அப்போது இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், அருள்முருகன் ஆகியோர் முன்பு நேற்று வந்தது.
அப்போது சி.பி.ஐ. வக்கீல் ஆஜராகி, “நகை மாயமானதாக நிகிதா அளித்த புகார் தொடர்பான ஆவணங்கள் இன்னும் சி.பி.ஐ.க்கு கிடைக்கவில்லை. அதுதொடர்பாக தனியாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கப்படும்” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், “நிகிதா புகார் தொடர்பான ஆவணங்களை ஒரு வாரத்தில் சி.பி.ஐ.யிடம் உள்ளூர் போலீசார் ஒப்படைக்க வேண்டும். இந்த கொலை வழக்கில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.
மேலும் நீதிபதிகள், இந்த வழக்கில் போலீசார் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையை தொடர்ந்து கண்காணிப்போம்” என உறுதி அளித்தனர்.
பின்னர், “அஜித்குமார் கொலை வழக்கு விசாரணைஅறிக்கையாக இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் மாதம் 24-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.