பள்ளத்தில் விழுந்து ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பலி..நெடுஞ்சாலை துறையை கண்டித்து பொதுமக்கள் மறியல்!
![]()
அயத்தூரில் தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பலியானதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத நெடுஞ்சாலை துறையை கண்டித்து பொதுமக்கள் மறியல் செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த புஜ்ஜன் கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (70) இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இந்நிலையில் கிருஷ்ணன் நேற்று இரவு தனது இரு சக்கர வாகனத்தில் அயத்தூர் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்றார்.இந்நிலையில் எண்ணூர் துறைமுகத்தில் இருந்து மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சந்திப்பு வரை 200 அடி சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வகுகிறது. அதில் ஒரு பகுதியாக திருவள்ளூர் அடுத்த அயத்தூர் பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் அயத்தூர் பகுதியில் நடைபெற்று வரும் பணியில் எவ்வித பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பலகை இல்லாமல் சாலையில் பள்ளம் தோண்டியுள்ளனர். இதில் கிருஷ்ணன் தவறி பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலே பலியாகியுள்ளார்.ஆனால் கோயில் திருவிழாவுக்கு சென்ற கிருஷ்ணனை காணாமல் போனதால் உறவினர்கள் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தேடி வந்தனர். அப்போது அயத்தூர் சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கிருஷ்ணன் விழுந்து இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் அப்பகுதி மக்கள் எந்த ஒரு முன்னெச்சரிக்கை செய்யாமல் பள்ளம் தோண்டிய நெடுஞ்சாலை துறையை கண்டித்தும், உயிரிழந்த கிருஷ்ணனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவல் அறிந்த செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தைதயுடத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பாக காணப்பட்டது.

