மகளிர் உரிமைத் தொகை ..பெண்களுக்கு தமிழக அரசு புதிய உத்தரவு!

Loading

மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான தகுதிகளில் 3 பிரிவுகளில் தமிழக அரசு விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.

திமுக அரசால் கொண்டுவரப்பட்ட மிகப்பெரிய திட்டமான மகளிர் உரிமைத்தொகை திட்டம் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.குறிப்பாக பெண்களுக்கு இலவசம் பயண திட்டமான மகளிர் விடியல் பயண திட்டமும் வரவேற்பை பெற்றுள்ளது.தமிழக அரசால் தமிழகத்தில் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் மாதம்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விடுபட்ட பெண்களை சேர்க்க அடுத்த மாதம் 15-ந்தேதி தொடங்க உள்ள உங்களுடன் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி மூலம் விண்ணப்பம் பெறப்பட உள்ளது.

இந்தநிலையில் இந்த மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான தகுதிகளில் 3 பிரிவுகளில் தமிழக அரசு விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:பல்வேறு அரசு துறைகளின் கீழ் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று பணியாற்றி, தற்போது ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதிவாய்ந்த பெண்கள், இந்த திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

அரசு திட்டங்களின் கீழ் மானியம் பெற்று அதன் மூலம் நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்கள், பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

இந்திராகாந்தி தேசிய விதவை ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம், ஆதரவற்ற-கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் இத்திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இவ்வாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

0Shares