பா.ஜ.க.வை சேர்ந்தவருக்கே மீண்டும் அமைச்சர் பதவி!
பா.ஜ.க.வை சேர்ந்தவருக்கே மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் பேட்டியளித்து உள்ளார்.
என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் ஆதிதிராவிட நலத்துறை மந்திரியாக இருந்து வந்தவர் சாய் ஜெ சரவணன் குமார். இவர் ஊசுடு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான இவருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மந்திரி பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறை மந்திரி பதவியை சாய் ஜெ சரவணன் குமார் திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து, அவர் ஒரு விளக்கம் அளித்ததில் பா.ஜ.க. தலைமை உத்தரவிட்டதன் பேரில், தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, ஆதிதிராவிடர் நலத்துறை மந்திரி பதவியில் இருந்த சந்திர பிரியங்கா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், சாய் ஜெ சரவணன் குமாரும் மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். திடீரென அவர் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதற்கு என்ன காரணம் என கேள்வி எழுந்துள்ளது. இது புதுவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க.வை சேர்ந்தவருக்கே மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் பேட்டியளித்து உள்ளார். , புதுச்சேரி துணை நிலை கவர்னர் கைலாசநாதனை சந்தித்து இதற்கான பரிந்துரையை வழங்கியுள்ளார். இதுபற்றி கவர்னர் மாளிகையில் இருந்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.