நாளை மறுநாள் பத்திர பதிவுத்துறையில் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்க வேண்டும் ..பெயிரா அரசுக்கு கோரிக்கை!

Loading

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், எதிர்வரும் 27.06.2025, வெள்ளிக்கிழமை சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, பதிவு அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கிட ஆவண செய்யக் கோரி தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் அவர்களுக்கு பொதுமக்களின் நலன் கருதி கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்..எதிர்வரும் வெள்ளிக்கிழமை 27.06.2025 சுபமுகூர்த்த தினம் என்பதால், இந்நன்னாளில் பெரும்பாலான பொதுமக்கள் சொத்துக்கள் வாங்குவது சம்பந்தமான ஆவணங்களை பதிவு செய்வதில் மிகுந்த ஆர்வமும் – மகிழ்ச்சியும் மற்றும் மனதிருப்தியும் அடைகின்றார்கள்.

இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் (குறிப்பாக பம்மல், பல்லாவரம், திருப்போரூர், படப்பை, செங்கல்பட்டு, ஆவடி, கூடுவாஞ்சேரி, வேளச்சேரி, தாம்பரம், திருப்பெரும்புதூர், நீலாங்கரை உள்ளிட்ட பல அலுவலகங்களில்) ஆவண பதிவு செய்ய தேவையான அளவிற்கு முன்பதிவு டோக்கன் பதிவு செய்ய இயலாமல் பற்றாக்குறை நிலவுகிறது.

இதனால் பெரும்பாலான பொதுமக்களுக்கு முன்பதிவு டோக்கன் கிடைக்க பெறாமல் ஏமாற்றத்துக்கு உள்ளாகின்றார்கள். ஆகவே அவர்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் பதிவுத்துறை மதிப்பளித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை 27.06.2025 சுபமுகூர்த்த தினமான அன்று ஆவண பதிவுகளை அனைத்து மக்களும் மேற்கொள்ளும் வகையில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் தேவையான அளவிற்கு கணிசமாக முன்பதிவு டோக்கன்களை உயர்த்தி வழங்க வேண்டுகிறோம். இதன் மூலம் பதிவுத்துறைக்கும் கூடுதல் வருவாய் கிடைப்பதுடன் பொதுமக்களின் விருப்பமும் நிறைவேறும்.

ஆகவே பெருமதிப்பிற்குரிய தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் அவர்கள், இதனை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் மேற்கண்ட சுபமுகூர்த்த தினத்தில் தேவையான அளவிற்கு கூடுதலாக முன்பதிவு டோக்கன்களைக் கணிசமாக உயர்த்தி வழங்கிட பதிவுத்துறை தலைவர் அவர்கள் வழிவகை செய்ய வேண்டுமென அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, பொதுமக்களின் நலன் கருதி பதிவுத்துறை தலைவருக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.

0Shares