யானை தந்தம் விற்க முயற்சி..4 பேருக்கு கைவிலங்கு போட்ட போலீஸ்!
கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து உடைந்த தந்த துண்டுகளை எடுத்து வந்து அதிக விலைக்கு விற்க முயற்சி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருவள்ளுவர் மாவட்டத்தில் யானை தந்தம் மறைத்து வைத்திருந்த 5 பேர் போலீசார் கைது செய்தனர்,இந்தநிலையில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, குந்தாரப்பள்ளி பகுதிகளில் சிலர் யானை தந்தங்களை விற்க முயற்சி செய்வதாக கிருஷ்ணகிரி வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை செல்போனில் தொடர்பு கொண்ட வனத்துறையினர், அவர்களிடம் தந்தம் வாங்குபவர்கள் போல் பேசி குந்தாரப்பள்ளிக்கு வருமாறு கூறினார்கள்.
இதையடுத்து கிருஷ்ணகிரி வனச்சரகர் முனியப்பன் தலைமையில், வனவர்கள் சிவக்குமார், முருகேசன், வனக்காப்பாளர்கள் ஜோதிவிக்னேஷ், மணிகண்டன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று குந்தாரப்பள்ளியில் நின்று கொண்டிருந்தனர்.
அந்த நேரம் 3 மோட்டார்சைக்கிள்களில் வந்த 4 பேரை மடக்கி பிடித்தனர். அப்போது நடத்திய விசாரணையில் அவர்கள் சூளகிரியை சேர்ந்த நரசிம்மன், பழையபேட்டை நந்தகுமார், கட்டிகானப்பள்ளி பால் அந்தோணிராஜ் சூளகிரியை சேர்ந்த மற்றொரு நரசிம்மன் என தெரிய வந்தது. அவர்கள் கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து உடைந்த தந்த துண்டுகளை எடுத்து வந்ததாகவும், அதை அதிக விலைக்கு விற்கலாம் என முயற்சி செய்ததாகவும் தெரிவித்தனர்.
அவர்களிடமிருந்து 400 கிராம் அளவிலான சிறிய இரண்டு உடைந்த தந்தங்களுடன், மோட்டார்சைக்கிள்களையும் பறிமுதல் செய்த வனத்துறையினர், 4 பேரையும் கைது செய்தனர்.