பகலில் வெயில் , இரவில் கனமழை..வானிலை ரிப்போர்ட்!
சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்றும் நாளையும் பரவலாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது தனியார் வானிலை ஆய்வாளர் கணித்துள்ளார்.
கேரளாவில் தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரலான மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை ,தென்காசி ,நீலகிரி ,தேனி திண்டுக்கல் ,கோயம்புத்தூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக பலத்த மழை பெய்து வருகிறது . சென்னையில் கடந்த சிலநாட்களாக மாலை நேரங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது.ஒருபுறம் மழை பெய்துவந்தாலும் மறுபுறம் வெப்பம் வாட்டி வதைத்தது.
அக்னி நட்சத்திரம் கடந்த 28-ம்தேதி முடிவடைந்த நிலையில் அதன்பிறகும் வெயிலின் தாக்கம் குறைந்து குறைவான வெப்ப நிலையே பதிவானது.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து தமிழகத்தில் 7 இடங்களில் நேற்று முன்தினம் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. சென்னையிலும் வெயில் அதிகரித்துள்ள நிலையில் நேற்று இரவு கனமழை பெய்தது.
சென்னையில் இரவு நேரங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் கூறியிருப்பதாவது:-இன்று காலை 8.30 மணி நிலவரப்படி துரைப்பாக்கம், பள்ளிக்கரணையில் தலா 5 செ.மீ, கண்ணகி நகர், மேடவாக்கம், மடிப்பாக்கம், மணலியில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
வலுவான மேற்கு காற்றின் ஊடுருவல் காரணமாக , கடல் காற்று உள் நுழைவதில் ஏற்படும் தடை மற்றும் தாமதம் காரணமாக கடலோர மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரித்து காணப்படுகிறது.தமிழகத்தில் பகல் நேரத்தில் வெப்பமான சூழலே நிலவும், கடலோர மாவட்டங்களில் பகல்நேர வெப்ப நிலை 100 டிகிரி அளவுக்கு பதிவாக வாய்ப்பு உள்ளது.
சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்றும் நாளையும் பரவலாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.