வைகை அணை திறப்பு..கால்வாயில் இறங்கவோ கடக்கவோ முயற்சிக்க வேண்டாம்..பொதுப்பணி துறை எச்சரிக்கை!
மதுரை ,திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து,அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர்.
மதுரை திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள விளை நிலங்களின் முதல் போக பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
மதுரை திண்டுக்கல் மாவட்டங்களில் பெரியார் பிரதான கால்வாய் பாசன பகுதியில் கீழ் உள்ள இருபோக பாசன நிலங்களில், முதல் போகத்திற்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையில் நேற்று 15 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 12 ந்தேதி வரையிலான 120 நாட்களில் 6 ஆயிரத்து 739 மில்லியன் கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடும்படியும், முதல் 45 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும், அதன் பின்னர் வரும் 75 நாட்களுக்கு முறை வைத்தும் தண்ணீர் திறக்கும்படியும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி இன்று காலை 10.30 மணிக்கு வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் பாசன கால்வாய் மூலம் திறந்து விடப்பட்டது. தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வணிகவரி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மூர்த்தி, தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சீத்சிங், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். வைகை அணையின் பிரதான ஏழு பெரிய மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது. பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீரில் அமைச்சர்களும், அதிகாரிகளும் மலர் தூவினர்.
வைகை அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 1297 ஏக்கரும், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்தில் உள்ள 16 ஆயிரத்து452 ஏக்கரும், மதுரை மாவட்டம் வடக்கு பகுதியில் உள்ள 26 ஆயிரத்து 792 ஏக்கர் உள்பட 45 ஆயிரத்து 41 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். வைகை அணையில் இருந்து மதுரை வரையிலான சுமார் 70 கிலோமீட்டர் தூரம் நீளமுள்ள பாசன கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் கால்வாயில் இறங்கவோ கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று பொதுப்பணி துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன், தேனி தெற்கு மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ, சட்டமன்ற உறுப்பினர்கள் மகாராஜன், சரவணகுமார், சோழவந்தான் எம்.எல். ஏ.வெங்கடேசன், வைகை அணை பொதுப்பணி துறையின் உதவி செயற்பொறியாளர் முருகேசன் ஆகியோர் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.