தமிழகத்தில் கொலை, ஆட்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து அதிகரிப்பு..முன்னாள் அமைச்சர் டிஜெயக்குமார் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் கொலை, ஆட்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து மற்றும் கஞ்சா புழக்கம் அதிகரித்து காணப்படுவதாக முன்னாள் அமைச்சர் டிஜெயக்குமார் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் நகராட்சி தி மு க அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே முன்னாள் அமைச்சர் பி வி ரமணா முன்னிலையிலும் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கழக அமைப்புச் செயலாளர் திருத்தணி கோ.அரி உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன், நகர செயலாளர் ஜி.கந்தசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், ஆனந்தி சந்திரசேகர், சித்ரா விஸ்வநாதன், சுமித்ரா வெங்கடேசன், மற்றும் ஒன்றிய செயலாளர்கள் சூரகாபுரம் சுதாகர், திருவாலங்காடு சக்திவேல், பூண்டி மாதவன், ஆர்.கே.பேட்டை கோ.குமார், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கோ.குமார், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் வி.ஆர்.ராம்குமார், சௌந்தர்ராஜன், நி்ர்வாகிகள் எஸ்.ஏ.நேசன், சிற்றம்பாக்கம் சீனிவாசன், ஆர்டிஇ சந்திரசேகர் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, திருவள்ளூர் நகராட்சி சி.வி. நாயுடு சாலையில் உள்ள பூங்காவில் அரசு விதியை மீறி வணிக வளாகம் கட்டப்பட்டதை கண்டித்தும், திருவள்ளூர் நகராட்சியில் ஆளும் கட்சியினரின் தலையீடு காரணமாக தரமற்ற சாலைகள் போடப்பட்டுள்ளதை கண்டித்தும், குப்பைகளை முறையாக அகற்றப்படாததை கண்டித்தும், பாதாள சாக்கடை வழியாக செல்லும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதை கண்டித்தும் மின்விளக்குகள் சரியாக பராமரிக்கப்படாததை கண்டித்தும் வீட்டு வரி நிர்ணயம் செய்வதில் அரசு விதிகள் முறையாக பின்பற்றப்படாத கண்டித்தும் பூங்காக்களில் குப்பைகள் தரம் பிரிக்கப்படுவதையும் புதிதாக திறக்கப்பட்ட பூங்காக்களில் நடைபாதை கற்கள் சரிவர அமைக்கப்படாதவை கண்டித்தும் நகராட்சியின் அலட்சிய போக்கால் பொதுமக்களுக்கு ஏற்படும் சுகாதார சீர்கேட்டை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், காவலர்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை தான் தற்போது தமிழகத்தில் உள்ளது. தமிழகத்தில் கொலை சர்வசாதாரணமாக நடைபெறுவதாகவும், ஆட்கடத்தல் கட்டப்பஞ்சாயத்து மற்றும் கஞ்சா புழக்கம் அதிகரித்து காணப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். குடும்ப கருவூலத்தை நிரப்புவதற்காகத் தான் திமுக அரசு செயல்படுகிறது. 4 வருடத்தில் அடித்த கொள்ளை விரைவில் வெளிவரும். பூங்காவை அழித்து கடைகள் கட்டியதை அகற்ற வேண்டும். அதற்காக நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் தெரிவித்தார். அதிமுக கூட்டணியில் இருக்கிற ஒரே காரணத்திற்காக மட்டுமே புரட்சி பாரதம் கட்சி ஜெகன்மூர்த்தியை கைது செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.