மகளிரை ஓசி பயணம் செய்வதாக இழிவுபடுத்துவதா? டி.டி.வி. தினகரன் கண்டனம்!
நலத்திட்டங்கள் எனும் பெயரில் தமிழகத்தின் தாய்மார்களை இழிவுபடுத்தி கொண்டிருக்கும் தி.மு.க.விற்கும், அதன் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த மகளிரும் இணைந்து முடிவுரை எழுதுவார்கள் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
தேனி மாவட்டம் மண்ணூத்து பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்து ஆண்டிப்பட்டி தி.மு.க. எம்.எல்.ஏ. மகாராஜன்,பேசுகையில் கூறியதாவது:மகளிர் விடியல் பயணத் திட்டம் மூலம் பெண்கள் அனைவரும் அரசு பஸ்சில் ‘ஓசி’யில் ஏறி தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி என பல்வேறு பகுதிகளுக்கு செல்லுங்கள்.உங்கள் வீட்டில் உள்ள ஆண்கள் சமையல் செய்யட்டும்” என்று கூறினார்.
‘ஓசி’ என்று விமர்சித்த தி.மு.க. எம்.எல்.ஏ.வின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்து ,அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், அப்பகுதி பெண்கள் அனைவரும் ஓசி பேருந்தில் பயணியுங்கள் என கிண்டலாக பேசிய வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, ஓசி பேருந்தில் பயணிப்பதாக நக்கலடித்து சிரித்த அமைச்சர் ஒருவர் தன் பதவியை இழந்த நிலையிலும், மகளிரை தரக்குறைவாக விமர்சிப்பதை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனின் இன்றைய பேச்சு வெளிப்படுத்துகிறது.பேருந்தில் இலவச பயணம் என அறிவித்துவிட்டு அதில் பயணிக்கும் மகளிரை தரக்குறைவாக விமர்சிப்பதையும் வாடிக்கையாக கொண்டிருக்கும் தி.மு.க.வினரின் ஆணவப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
நலத்திட்டங்கள் எனும் பெயரில் தமிழகத்தின் தாய்மார்களை இழிவுபடுத்தி கொண்டிருக்கும் தி.மு.க.விற்கும், அதன் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த மகளிரும் இணைந்து முடிவுரை எழுதுவார்கள் என இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.