சென்னை உட்பட 12 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரலான மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை ,தென்காசி ,நீலகிரி ,தேனி திண்டுக்கல் ,கோயம்புத்தூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக பலத்த மழை பெய்தது. சென்னையில் கடந்த சிலநாட்களாக மாலை நேரங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது.ஒருபுறம் மழை பெய்துவந்தாலும் மறுபுறம் வெப்பம் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் சென்னையில்
நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், பிற்பகலில்சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாலையில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு, மதுரவாயல், வளசரவாக்கம், முகப்பேர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது.
இந்தநிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுதன் காரணமாக இன்று வடதமிழகம், தென்தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அந்தவகையில் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், தென்காசி, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.