திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வர தேரோட்டத்தில் தருமபுர ஆதீனம் பங்கேற்பு!
உலக பிரசித்தி பெற்ற திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வர தேவஸ்தான திருத்தேரோட்டம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
புதுச்சேரி காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற தர்ப்பாரண்யேஸ்வர தேவஸ்தான பிரம்மோற்சவ விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது. பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருத்தேரோட்டம் விழா வெகு விமர்சையாக (06.06.2025) வெள்ளிக்கிழமை காலையில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு புதுச்சேரி ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு சாய் ஜே. சரவணகுமார், மாண்புமிகு திருநள்ளாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. பி.ஆர்.சிவா, புதுச்சேரி காவல்துறை டிஐஜி திரு.சத்திய சுந்தரம் லபிஎஸ் காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் செல்வி லட்சுமி சௌஜன்யா, ஐபிஎஸ், தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருநள்ளாறு ஆலய நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் மற்றும் முக்கியஸ்தர்கள் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து தேரை வடம் இழுத்தனர்.
மேலும் தொடர்ந்து நாள்தோறும் விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் சுவாமி அம்பாள், பஞ்சமூர்த்திகள் வீதியுலா மற்றும் தங்க ரிஷப வாகனத்தில் பிரணாம்பிகை தர்பாரண்யேஸ்வரர் சுவாமி வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. செண்பக தியாகராஜ சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையை தொடர்ந்து செண்பக தியாகராஜ சுவாமி தேரில் எழுந்தருளினார். இதேபோல் மற்றொரு தேரில் நீலோத்பாலாம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் திருக்தேர்களில் எழுந்தருளினர். பின்னர் ஐந்து திருத்தேர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் காட்டப்பட்டு பக்தர்கள் ஆர்வமுடன் வடம் பிடித்து இழுத்தனர்.
இவ்விழாவிற்கு பாதுகாப்பு பணியில் புதுச்சேரி காவல்துறை டிஐஜி திரு.சத்திய சுந்தரம் ஐபிஎஸ், அவர்களின் மேற்பார்வையில் காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் செல்வி லட்சுமி சௌஜன்யா, ஐபிஎஸ் . அவர்கள் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் நாளை இரவு (இன்று) செண்பக தியாகராஜ சுவாமி எண்ணைய்க்கால் மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், 07ம் தேதி இரவு சனீஸ்வர பகவான் தங்க காகா வாகனத்தில் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. நாளை மறுநாள் 8ம் தேதி இரவு தெப்போற்சவம் நடைபெற உள்ளது.