கொரோனா முன்னெச்சரிக்கை : திருப்பதி தேவஸ்தானத்துக்கு பறந்த திடீர் உத்தரவு!
![]()
திருப்பதியில் தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் கூடுதல் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பால் லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். 2022-ம் ஆண்டுக்கு பிறகு படிப்படியாக உலகம் சகஜ நிலைக்கு திரும்பியது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று அவ்வப்போது தலைகாட்டி வருகிறது. அந்த வகையில், கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகையே உலுக்கிய கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள் நிலையில் மீண்டும் பல்வேறு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது வரை 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதற்கான தீவிரம் இன்னும் தொடங்காத நிலையில் சுகாதாரத்துறை சார்பில் எவ்வித அச்சமும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.இந்தநிலையில் ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நல இயக்குனரகம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதன்படி தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் கூடுதல் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான ஒன்று. பக்தர்கள் பீதியடைய வேண்டாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

