பாகிஸ்தானுக்கு உளவு..மேலும் ஒரு யூடியூபர் கைது!
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மேலும் ஒரு யூடியூபர் பஞ்சாப்பில் கைது செய்யப்பட்டுள்ளார். ‘ஜான் மஹால்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்த அவர் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 22-ந் தேதி காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டது பாகிஸ்தானும், அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யும் என்பது தெரியவந்தது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழித்து ஒழித்தன. மேலும் பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. இதனிடையே பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கூறி இந்தியாவில் பல்வேறு நபர்களை உளவுத்துறை கைது செய்து வருகிறது.இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை ராணுவம், பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் எடுத்து வருகிறார்கள். நேற்று பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கூறி அரசு அதிகாரி ஒருவரை உளவுத்துறை கைது செய்துள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மேலும் ஒரு யூடியூபர் பஞ்சாப்பில் கைது செய்யப்பட்டுள்ளார். ‘ஜான் மஹால்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்த ஜஸ்பிர் சிங்கிற்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2020 முதல் 3 முறை பாகிஸ்தான் சென்று வந்துள்ளார் ஜஸ்பிர் சிங். பாகிஸ்தானிற்கு உளவு பார்த்ததாக ஜோதி மல்கோத்ரா கைதான பின், ஐஸ்பிர் சிங் தன்னிடம் இருந்த தகவல் தொடர்பு ஆதாரங்களை அழிக்க முயன்றுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை கொடுத்ததாக அரியானாவைச் சேர்ந்த பெண் யூடியூபர் ஜோதி மல்கோத்ரா உள்பட12 உளவாளிகளை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.