நாளை பள்ளிகள் திறப்பு: ஆம்னி பஸ் கட்டணம் பன்மடங்காக உயர்வு..பயணிகள் அதிர்ச்சி!
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் வெளியூர்களில் இருந்து சென்னை வருவதற்கான ஆம்னி பஸ் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
கோடை விடுமுறை முடிந்து, சென்னையில் இருந்து வெளியூர் சென்றவர்கள், வீடு திரும்பி வருகின்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தமிழகத்தில் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்பும் வகையில் அரசு சார்பில் சுமார் 2,500 சிறப்பு பஸ்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு விடப்பட்டு இருக்கிறது.
நேற்றும் இன்றும் அனைத்து பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.ஏராளமானோர் சென்னை திரும்புவதால் ஆம்னி பஸ்களில் அதிகளவில் கட்டணங்கள் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டது.மதுரையில் இருந்து சென்னைக்கு சில பஸ்களில் ரூ.3,999 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தென்மாவட்டம் மட்டுமின்றி, கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கூடுதல் கட்டணம் இருந்தது. அதேபோல் சென்னைக்கு வந்தவர்களும், தங்களது சொந்த மாவட்டங்களுக்கு திரும்புவதால் அந்த ஆம்னி பஸ்களிலும் வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தமிழக அரசு சார்பில் விடப்பட்டு இருந்த சிறப்பு பஸ்களில் முன்பதிவுகள் முடிந்து விட்டன. சிறப்பு பஸ்களில் ஏராளமானோர் சென்னையை நோக்கி ஏராளமான வாகனங்கள் அணிவகுத்ததால் சென்னை மற்றும் செங்கல்பட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இன்றும், அதிகளவு வாகனங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.