புகையிலை பயன்படுத்தி எச்சில் துப்பினால் ரூ. 1,000 அபராதம்!

Loading

கர்நாடக மாநிலத்தில் பொது இடங்களில் புகையிலை பயன்படுத்திவிட்டு எச்சில் துப்பினால், அவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் பயன்படுத்துவது தொடர்பான சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து கர்நாடகத்தில் புகையிலை பொருட்கள் பயன்படுத்திவிட்டு பொது இடங்களில் எச்சில் துப்பினால், இதற்கு முன்பு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு இருந்த அபராத தொகையை கர்நாடக அரசு தற்போது ரூ.1,000 ஆக உயர்த்தி உள்ளது.

அதுபோல், இனிமேல் 21 வயது நிரம்பியவர்களுக்கு தான் மாநிலத்தில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கும் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல், கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள 100 மீட்டர் சுற்றளவுக்கு உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி கிடையாது.மேலும் அனைத்து ஹூக்கா பார்களுக்கு தடை விதித்தும் ,இனிமேல் கர்நாடகத்தில் ஹூக்கா பார்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

மேலும் அரசின் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக ஹூக்கா பார்கள் நடத்தினால், அவர்களுக்கு 1 ஆண்டு முதல் 3 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படுவதுடன், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று அரசு தனது அரசாணையில் தெரிவித்துள்ளது.

0Shares