ரூ.199 கட்டணத்தில் அதிவேக இணையதள வசதி..அடுத்த மாதம் தொடக்கம்!
வரும் ஆண்டுகளிலும், ஆண்டுக்கு ஒரு கோடி என்ற இலக்குடன் அனைத்து வீடுகளுக்கு இந்த இணையதள சேவை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
அதிவேக இணைய சேவையை வழங்கும் நோக்கத்தில் மத்திய அரசு ‘பாரத் நெட்’ திட்டத்தின் கீழ் அனைத்து கிராமப்புறங்களுக்கும் அதிவேக இணையதள சேவை வழங்கும் திட்டத்தை நாடு முழுவதும் தொடங்கியது.
தமிழகத்தில் இந்த திட்டம், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு அதற்கான பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கி, தற்போது அது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.இதில் 12 ஆயிரத்து 525 கிராம பஞ்சாயத்துகளில் ‘ஆப்டிகல் பைபர் கேபிள்கள் மூலம் இந்த சேவை வழங்கபடவுள்ளது .
இதுவரை சுமார் 4 ஆயிரம் கிராமங்களில், இணையதள சேவை வழங்குவதற்கான நபர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்புகள் https://tanfinet. tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதேபோல மேலும் 4 ஆயிரம் கிராமங்களுக்கும்அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.இந்த ஆண்டுக்குள் மட்டும் ஒரு கோடி வீடுகளுக்கும், வரும் ஆண்டுகளிலும், ஆண்டுக்கு ஒரு கோடி என்ற இலக்குடன் அனைத்து வீடுகளுக்கு இந்த இணையதள சேவை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
அதாவது வீடுகளுக்கு குறைந்தபட்சமாக ரூ.199 கட்டணத்தில், 20 எம்.பி.பி.எஸ் (Mpbs) வேகத்தில் அளவில்லா இணையதள சேவை வழங்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து ரூ.399 மற்றும் ரூ.499 திட்டமும் வழங்கப்பட உள்ளது.வணிக நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு ரூ.899 மற்றும் ரூ.1,199 என்ற இரு திட்டங்கள் செயல்பட உள்ளன.