பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு கல்லூரியில் சேர்வதற்கு விழிப்புணர்வு முகாம்..மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் அறிவிப்பு!

Loading

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் கல்லூரியில் சேர்வதற்கு விழிப்புணர்வு முகாம் வரும் 14 ம் தேதி தொடக்கம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று மேல்நிலை இரண்டாம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்காக கல்லூரியில் சேர்வதற்கான விழிப்புணர்வு முகாம் திருவள்ளூர் மாவட்டத்தில் 14.05.2025 முதல் தொடங்க உள்ளது.

கல்லூரி கனவு முகாமில் 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று மேல்நிலை இரண்டாம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பங்கேற்று கல்லூரி சேர்க்கை தொடர்பான விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். இம்முகாமில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், ஐடிஐ மற்றும் இதர கல்வி நிறுவனங்கள் தங்கள் கல்வி நிறுவனத்தால் அளிக்கப்படும் படிப்புகள் மற்றும் உதவித்தொகை திட்டங்களை எடுத்துரைக்க உள்ளனர்.

முகாமில் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டம் குறித்து பாட வல்லுநர்களால் மாணவர்களுக்கு எடுத்துரைக்க உள்ளனர், முகாமில் மாணவர்கள் பங்கேற்று பயன்பெறலாம், இம்முகாமானது 14.05.2025 அன்று மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, சோழவரம் மற்றும் எல்லாபுரம் ஆகிய வட்டாரத்தை சேர்ந்த மாணவ மாணவியர்கள் , 15.5.2025 அன்று பூந்தமல்லி ,வில்லிவாக்கம் , புழல் வட்டாரத்திற்கு கோஜன் பொறியியல் கல்லூரி எடப்பாளையத்திலும், திருவள்ளூர், பூண்டி ,கடம்பத்தூர் திருவாலங்காடு மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி ஊத்துக்கோட்டை (ஆண்கள், மகளிர்) ஆகிய வட்டாரத்திற்கு பாண்டூர் இந்திரா மருத்துவக் கல்லூரியிலும், 19.05.2025 அன்று திருத்தணி, இரா.கி.பேட்டை பள்ளிப்பட்டு ஜி.ஆர்.டி. பொறியியல் கல்லூரி, திருத்தணி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம்கள் நடைபெறும்.

முகாமினை மாணவ மாணவியர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி உயர் கல்விக்கு சேர்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தெரிவித்தார்.

0Shares