திருவள்ளூர் வீரராகவர் கோவில் சித்திரை தேர் திருவிழா..ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
திருவள்ளூரில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து காலை தங்க சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும், உற்சவர் ஶ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாளான இன்று வீரராகவர் கோயிலின் 60 அடி உயரமும், 21 அடி அகலமும் கொண்ட திருத்தேர் பவனி நடைபெற்றது. திருதேரில் காலை 7 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீ வீரராகவர் பெருமாள் தேரடியில் இருந்து புறப்பட்டு நான்கு மாட வீதிகள் வழியாக சென்று தேர் மீண்டும் தேரடியை வந்தடைந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் நோயை தீர்க்க வல்லவர் என்பதால் பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை தேர் சக்கரத்தில் கொட்டி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இந்த தேர் திருவிழாவில் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வீரராகவரை வழிபட்டு சென்றனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கௌரவ ஏஜென்ட் சி.சி.சம்பத், மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.சம்பத் மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.