மாயமான மயானம்..கிராமமக்கள் குமுறல்!
அருகே மூலச்சத்திரம் அண்ணா நகர் பகுதியில் மயானம் கேட்டு ஊர்பொதுமக்கள் பெருந்திரளானோர் கூடியதால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தாலுகாவிற்கு உட்பட்ட மூலச்சத்திரம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட அருந்ததியர் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் தினக்கூலிக்கு வேலைக்கு சென்று வாழ்வாதாரத்தை கழித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .
சுமார் 40-ஆண்டு காலத்திற்கு முன்னதாக காலங்காலமாக அண்ணாநகர் பகுதிக்கு உட்பட்ட அரசு நிலத்தில் தான் ஊரில் இறந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்துவருவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது . தற்போது அந்த மயான நிலத்தை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு சடலத்தை இங்கே புதைக்க விடமாட்டோம் என கூறியதில் பொதுமக்கள் கோபமடைந்தனர்.
இந்நிலையில் அண்ணாநகர்பகுதியில் சடலத்தை அடக்கம் செய்ய முடியாமல் மயான ஆக்கிரமிப்புச் செய்த நபரிடம் ஊர் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இச்சம்பவம் அறிந்த திண்டுக்கல் மேற்கு தாலுகா வட்டாட்சியர்,ஒட்டன்சத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் வந்து ஊர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சடலத்தை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக கூறினர்.
இனிவரும் காலங்களில் ஊர் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று அண்ணாநகர் பகுதியில் அருந்ததியர் மக்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு மயானம் ஏற்பாடு செய்து தரப்படும் என உறுதி அளித்த பின்பு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதில் அண்ணா நகர் ஊர் பொதுமக்கள் பெருந்திரளானோர் கூடியதால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.