திருத்துறைப்பூண்டி அருகே ஆம்னி வேன் – அரசு பேருந்து மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு!

Loading

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து நாகை மாவட்டம், வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வருவதற்காக நண்பர்களான சாஜிநாத், சாபு, சுஜித், ராஜேஷ், ராகுல், ரெஜினேஷ் மற்றும் ஒருவர் முடிவு செய்தனர்.

அதன்படி, அவர்கள் திருவனந்தபுரத்தில் இருந்து ஆம்னி வேனில் வேளாங்கண்ணிக்கு புறப்பட்டனர். ஆம்னி வேனானது இன்று அதிகாலை திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கருவேப்பஞ்சேரி என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் எதிரே நாகப்பட்டினத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் வேனில் பயணித்த சாஜிநாத், ராஜேஷ், சுஜித், ராகுல் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், உள்ளே இருந்த 3 பேர் படுகாயத்துடன் சாலையில் கிடந்துள்ளனர். இதனை கண்ட அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, அங்கே வந்தவர்கள் அனைவரையும் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கிருந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான 4 பேரின் உடல்கள் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எடையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட், முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த நண்பர்கள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

0Shares