சென்னை துறைமுகமும், காமராஜர் துறைமுகமும் கடந்த நிதியாண்டில் 103.37 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளன

Loading

சென்னை துறைமுகமும், காமராஜர் துறைமுகமும் கடந்த நிதியாண்டில் 103.37 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளன

 PIB Chennai

சென்னை துறைமுகமும் காமராஜர் துறைமுகமும் இணைந்து கடந்த நிதியாண்டில் (2024-25) இதுவரை இல்லாத அளவாக 100 மில்லியன் டன் சரக்குகளுக்கும் அதிகமாக கையாண்டு  சாதனைப் படைத்துள்ளன. இந்த இரண்டு துறைமுகங்களின் கடந்த நிதியாண்டு செயல்பாடுகள் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய சென்னை துறைமுக ஆணையம், காமராஜர் துறைமுகம் ஆகியவற்றின் தலைவர் திரு சுனில் பாலிவால், இரு துறைமுகங்களும்  கடந்த நிதியாண்டில் மொத்தம் 103.37 மில்லியன் மெட்ரிக் டன் கணக்குகளைக் கையாண்டுள்ளதாக தெரிவித்தார்.

சென்னை துறைமுகம் 54.96 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளையும் காமராஜர் துறைமுகம் 48.41 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளையும் கையாண்டுள்ளதாக அவர் கூறினார். சென்னை துறைமுகம் முந்தைய நிதியாண்டில் சரக்கு கையாளுதலில் 6.5%  வளர்ச்சியையும் காமராஜர் துறைமுகம் 6.9%  வளர்ச்சியையும் எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சென்னை துறைமுகம் ரூ.1088.22 கோடி வருவாயையும் காமராஜர் துறைமுகம் ரூ.1130.60 கோடி வருவாயையும் ஈட்டியுள்ளதாக அவர் கூறினார். காமராஜர் துறைமுகம் வரிக்குப் பிந்தைய வருவாயாக ரூ.545.95 கோடியை ஈட்டியுள்ளதாகவும் ரூ.500 கோடிக்கு அதிகமாக இத்துறைமுகம் லாபம் ஈட்டியிருப்பது இதுவே முதல் முறை என்றும் அவர் கூறினார்.

இந்தத் துறைமுகங்களில் உள்கட்டமைப்பு வசதிகளும் துறைமுகங்களை இணைக்கும் திட்டங்கள் தொடர்ந்தும் விரைந்தும் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். கழிவுநீர் சுத்திகரிப்பு, சூரியமின்சக்தி  உள்பட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நடைமுறைகளும் இத்துறைமுகங்களில் பின்பற்றப்படுவதாக அவர் கூறினார். கடந்த அக்டோபர் மாதம் ஜெர்மனியின் ஹேம்பர்கில் நடைபெற்ற உலகத் துறைமுகங்கள் மாநாட்டில் சென்னை துறைமுகம், நிலைத்தன்மைக்கான சர்வதேச விருதைப் பெற்றதாகவும் இந்த விருதைப் பெற்ற முதல் இந்திய துறைமுகம்  சென்னை துறைமுகம் தான் என்றும் திரு சுனில் பாலிவால் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் சென்னை துறைமுக ஆணையத்தின் துணைத்தலைவர் திரு எஸ் விஸ்வநாதன், காமராஜர் துறைமுகத்தின் மேலாண்மை இயக்குநர் ஜே பி ஐரின் சிந்தியா, சென்னைப் பத்திரிகை தகவல் அலுவலக இயக்குநர் திரு பி அருண்குமார் உள்ளிட்டோர்      பங்கேற்றனர்.

0Shares