ஒருபுறம் பட்ஜெட் கூட்டத்தொடர்..மறுபுறம் போராட்ட களம்..தீவிரமடையும் PWD ஊழியர்களின் போராட்டம்!
மீண்டும் வேலை வழங்கிடவும், 2009 ஆம் ஆண்டு முதல் பணியில் உள்ள சுமார் 8000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்களின் வாழ்வாதாரத்தையும் குடும்பத்தையும் காப்பாற்ற யூனியன் பிரதேச சட்டம் 309 ஆவது பிரிவின்படி உடனடியாக புதுச்சேரி அரசு கொள்கை முடிவு எடுக்க வலியுறுத்தி நாளை 12-03-2025 புதன்கிழமை சட்டசபை முற்றுகை செய்யபோவதாக பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்ட குழு தெரிவித்துள்ளது.
புதுச்சேரி அரசின் கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு பொதுப்பணித்துறையில் சுமார் 2000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வவுச்சர் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
அப்போது நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலை காரணம் காட்டி தேர்தல் துறை நீக்க சொன்னதாக சொல்லி அனைவரையும் பொதுப்பணித்துறை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. அன்று முதல் கடந்த 10 ஆண்டு காலமாக மீண்டும் தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து பல கட்ட போராட்டங்களை நடத்திக் கொண்டுவருகின்றனர்.
இந்த போராட்டத்தின் பயனாக கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மாண்புமிகு முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் பொதுப்பணித்துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் (:அதாவது ஒரு மாதம் சம்பளம் பெற்று இருந்தாலும்) சம்பளமாக ரூபாய் 10500 /- வழங்கப்பட்டு மீண்டும் வேலை வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஆணையை வெளியிட்டார்.
இதையடுத்து இந்த அறிவிப்பு செய்து 2 ஆண்டுகள் ஆகியும் வேலை வழங்காததால் மாண்புமிகு முதல்வர் அவர்கள் தற்போது நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவருக்கும் மத்திய அரசின் சட்ட கூலி ரூபாய் 18000 /- ஆயிரம் சம்பளத்துடன் மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி 10-3-2025 திங்கட்கிழமை அன்று சுதேசி மில் அருகில் பட்டை நாமத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்தநிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்கிடவும் 2009 ஆம் ஆண்டு முதல் பணியில் உள்ள சுமார் 8000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்களின் வாழ்வாதாரத்தையும் குடும்பத்தையும் காப்பாற்ற யூனியன் பிரதேச சட்டம் 309 ஆவது பிரிவின்படி உடனடியாக புதுச்சேரி அரசு கொள்கை முடிவு எடுக்க வலியுறுத்தி புதுச்சேரி & காரைக்கால் பொதுப்பணித்துறை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர்கள்G.P. தெய்வீகன் , காரைக்கால் C. வினோத் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் சட்டசபை முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.நாளை 12-03-2025 புதன்கிழமை, காலை 10.00 மணி
தலைமை பொறியாளர் அலுவலகம் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சட்டசபை முற்றுகையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுப்பணித்துறை (PWD) மற்றும் பெருந்தலைவர் காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலையம் ( PKKVK ),PWD பெண் வாரிசுதாரர்கள் (வவுச்சர்) ஆகிய பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.