14-ந்தேதி அய்யப்பன் கோவில் நடை திறப்பு.. அய்யப்பன் உருவம் பதித்த தங்க டாலர்கள் விற்பனை செய்ய தேவஸ்தான முடிவு!
திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் 70-வது ஆண்டை முன்னிட்டு அய்யப்பன் உருவம் பதித்த தங்க டாலர்கள் சன்னிதானத்தில் பூஜை செய்து விற்பனை செய்ய தேவஸ்தான முடிவு செய்துள்ளது.
உலக பிரசித்தி பெற்ற கேரள மாநிலம் ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் நாள் நடை திறக்கப்பட்டு 48 நாள் மகர விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.அப்போது அன்றுமுதல் உலகம் முழுவதும் இருந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் தொடங்குவர்.இதையடுத்து விரதமிருந்த பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய சபரிமலைக்கு வருகை தருவார்.அதனை தொடர்ந்து 48 நாள் மகர விளக்கு பூஜை நிறைவடைந்ததும் ஐயப்பன் சன்னதி சாத்தப்படும்.இதையடுத்து மாதாந்திர பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுவது வழக்கம்.
இந்தநிலையில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் பங்குனி மாத பூஜைக்காக வருகிற 14-ந்தேதி மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.தொடர்ந்து 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தினமும் பல்வேறு பூஜை, வழிபாடுகள் நடைபெற்ற பின்னர் 19-ந்தேதி இரவு அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் செய்தியாளர்கள் கூறியதாவது:-பங்குனி மாத பூஜை முதல் பக்தர்கள் 18-ம் படி ஏறி கொடி மரத்தில் இருந்து நேராக, கோவிலுக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் இதன்காரணமாக பக்தர்கள் மேம்பாலத்தை சுற்றி வந்து தரிசனம் செய்வதற்கான நேரம் மிச்சமாகும் என்றும் பக்தர்கள் கூடுதல் நேரம் அய்யப்பனை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும் என கூறினார்.
மேலும் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் 70-வது ஆண்டை முன்னிட்டு அய்யப்பன் உருவம் பதித்த தங்க டாலர்கள் சன்னிதானத்தில் பூஜை செய்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஏப்ரல் மாதம் விஷூ பண்டிகையையொட்டி விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்தார்.
ஏப்ரல் 1-ந்தேதி முதல் இதற்கான முன்பதிவு நடைபெறும். மே மாதம் சர்வதேச அய்யப்ப சங்கமம் பம்பையில் 2 நாட்கள் நடைபெறும். இதில் 50-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு அய்யப்ப பக்தர்கள் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.