பத்தாம் வகுப்புக்கு 2 முறை பொதுத்தேர்வு: சி.பி.எஸ்.இ.முடிவு!
அடுத்த ஆண்டு முதல் பத்தாம் வகுப்புக்கு இரு முறை பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது என்றும் பிப்ரவரி-மார்ச்சில் முதல் தேர்வும், மே மாதம் இரண்டாவது தேர்வும் நடத்த சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது.
உயர்நிலைக்குழு கூட்டம் மத்திய கல்வி மந்திரி தலைமையில் சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் கல்வித்துறை செயலாளர், சி.பி.எஸ்.இ. கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளின் உயர் அதிகாரிகள் மற்றும் உலகளாவிய பாடத்திட்டத்தை கொண்ட பள்ளிகளின் பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.
அப்போது இந்தக் கூட்டத்தில் உலகளாவிய பாடத்திட்டத்தை நிறுவுதல் மற்றும் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் இதையடுத்து, 2026-2027-ம் ஆண்டு முதல் வெளிநாட்டுப் பள்ளிகளுக்கான உலகளாவிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும், அதற்கேற்ப விரிவான செயல் திட்டத்தை தயாரிக்கவும் சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிடப்பட்டது.
மேலும் உலகளாவிய பாடத்திட்டத்தை நிறுவும் பணிகளில் தேர்வு முறையும் மாற்றப்படுகிறது என்றும் அதாவது தற்போது சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடக்கிறது என்றும் இதனை ஆண்டுக்கு இருமுறை தேர்வாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2 முறை நடக்கும் இந்தத் தேர்வுகள், அதன் முடிவுகள் மாணவர்களுக்கு இளங்கலை படிப்பில் சேர்வதற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் திட்டமிடப்பட வேண்டும் என சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், இந்த திட்டத்துக்கான அறிவிப்பை சி.பி.எஸ்.இ. இன்று வெளியிட்டுள்ளது.அதன்படி, முதல் கட்டமாக அடுத்த ஆண்டு முதல் பத்தாம் வகுப்புக்கு இரு முறை பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது என்றும் பிப்ரவரி-மார்ச்சில் முதல் தேர்வும், மே மாதம் இரண்டாவது தேர்வும் நடத்த சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது என்றும் செய்முறை தேர்வு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.