கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதி மற்றும் சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை

Loading

கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதி மற்றும் சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை :

திருவள்ளூர் செப் 14 : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் அமைந்துள்ளது கடம்பத்துார் ரயில் நிலையம். இப்பகுதியினர் வேண்டுகோளை அடுத்து 14.5 கோடி ரூபாய் மதிப்பில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி 2015-ல் அதிமுக ஆட்சியில் துவங்கி 2022- ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த ரயில்வே மேம்பாலம் வழியாக தினந்தோறும் புதுமாவிலங்கை, அகரம், சத்தரை, பேரம்பாக்கம், இருளஞ்சேரி, கூவம், குமாரச்சேரி, கீழச்சேரி, மப்பேடு, சிற்றம்பாக்கம், நரசிங்கபுரம், களாம்பாக்கம், போன்ற  சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் மூலம் திருவள்ளூர், சென்னை, அரக்கோணம், திருத்தணி, திருப்பதி போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்த ரயில் நிலையத்தில் பயணிகளின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, கழிவறை வசதி,இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக இல்லாமல் பயணிகள் அவதிப்பட்டு  வருகின்றனர். இந்த கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் பயணிகள் தண்டவாளத்தை சுலபமாக கடந்து செல்ல சுரங்கப்பாதை இல்லை. மேலும் பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்ல ஏதுவாக அமைக்கப்பட்ட சிமெண்டு தளங்கள் பணிகள் காரணமாக தோண்டப்பட்டது. ஆனால் மறுபடியும் சீரமைக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.5.50 கோடி ரூபாய் மதி்பபீட்டில் 300 அடி நீளம் 16 அடி அகல 9 அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவங்கப்பட்டது.
ஆறு மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே துறையினர் தெரிவித்த நிலையில் தற்போது சுரங்கப்பாதை பணியை கிடப்பில் போடப்பட்டதால்  ரயில் நிலையத்திற்கு வரும் மாணவ மாணவிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், வயதான பெண்கள், கர்ப்பிணி தாய்மார்கள் என பலதரப்பட்ட மக்களும் ஆபத்தை உணராமல் நடந்து செல்லும்போது அடிக்கடி ரெயில் மோதி பயணிகள் உயிரிழந்து வரும் சம்பவம் இங்கு தொடர்கதையாக நடந்து வருகிறது.  மேலும் சரக்கு ரயில்களை அடிக்கடி நிறுத்தி விடுவதால் அதில் நுழைந்து செல்லும் காட்சியும் அரங்கேறி வருகிறது. எனவே அடிப்படை வசதிகள் மற்றும் கடம்பத்தூரில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க ரரில்வேதுறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0Shares