மதுரையில் 2024, ஜூலை 12 அன்று மீன்வளர்ப்புத் துறைகளின் கோடைகால சந்திப்பிற்கு மீன்வளத்துறை ஏற்பாடு
மதுரையில் 2024, ஜூலை 12 அன்று மீன்வளர்ப்புத் துறைகளின் கோடைகால சந்திப்பிற்கு மீன்வளத்துறை ஏற்பாடு செய்துள்ளது
நாட்டில் சுமார் 3 கோடி மீனவர்களுக்கும், மீன்வளர்ப்புத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் மீன்வளர்ப்புத் தொழில் வாழ்வாதாரத்தையும், வேலைவாய்ப்பையும் அளிக்கிறது. உலக அளவில் மீன் உற்பத்தித் துறையில் 8 சதவீத பங்களிப்புடன் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.
மீன்வளர்ப்புத் துறையில் 2-வது இடத்தில் உள்ளதுடன், இறால் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. மீன் பிடிப்பில் 3-வது பெரிய நாடாக உள்ளது.
இந்நிலையில், மீனவர்கள், மீன் சார்ந்த தொழிலில் ஈடுபடுவோர் ஆகியோரின் பங்களிப்பை வெளிப்படுத்தவும் மீன்வளர்ப்புத் துறையின் வளர்ச்சிக்காகவும், மீன் வளர்ப்புத் துறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தமிழ்நாட்டின் மதுரையில் 2024 ஜூலை 12 அன்று மீன்வளர்ப்புத் துறை கோடைகால சந்திப்பிற்கு மீன்வளத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
மத்திய மீன் வளர்ப்பு, கால்நடைப் பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் தலைமையில் இணையமைச்சர்கள் பேராசிரியர் எஸ்.பி. பாகெல், திரு ஜார்ஜ் குரியன், தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் திரு அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். மீன்வளர்ப்புத் துறையில் ஈடுபடுவோர், ஆராய்ச்சியாளர்கள், தொழில் நிபுணர்கள், தொழில்முனைவோர் ஆகியோர் மீன்வளர்ப்புத்துறை வளர்ச்சிக்கான தங்களது கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள உள்ளனர். பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் குறித்து இம்மாநாட்டில் எடுத்துரைக்கப்பட உள்ளது.
மீன் பற்றிய கண்காட்சி, அமைச்சர்களுக்கு இடையேயான விவாதங்கள், காணொலிக் காட்சி வாயிலாக மீன்வளத் திட்டங்கள் தொடக்கம், மீனவர்களுடனான உரையாடல், பயனாளிகளுக்கு வேளாண் கடன் அட்டை வழங்குதல் உள்ளிட்டவை மாநாட்டில் இடம் பெற உள்ளது.
மீன்வளத் துறையில் தங்களுக்கான வளர்ச்சி, சவால்கள், வாய்ப்புகள், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள மீன்வளர்ப்புத்துறை கோடைகால சந்திப்பு 2024 வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் மீன்வளத்துறையின் பல்வேறு திட்டங்கள், கொள்கைகள் குறித்து இணைச் செயலாளர் உரையாற்ற உள்ளார். மத்திய மீன்வளத்துறை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மீன்வளத்துறைகளுக்கான முக்கிய தேவைகள் குறித்தும் அவற்றை அமல்படுத்துவது குறித்தும் இம்மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.