காலில் பிளேட் பொருத்திய நிலையில் ரிஸ்க் எடுத்து நடித்த யாஷிகா
விநய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் நடித்துள்ள படம், ‘சில நொடிகளில்’. நாளை திரைக்கு வருகிறது. பாடகியும், இப்படத்தின் இசை அமைப்பாளருமான தர்ஷனா கூறுகையில், ‘எனக்கு ‘பல்லேலக்கா’ பாடல் மூலம் திரைப்பயணம் தொடங்கியது. பிறகு ‘கருப்பு பேரழகா’, ‘ஆட்டக்காரா’ உள்பட நிறைய பாடி, கடந்த 17 வருடங்களாக பாடகியாக மட்டுமே இருந்தேன். இசைஅமைப்பாளராவேன் என்று நினைத்துப் பார்த்தது இல்லை. அதை ‘சில நொடிகளில்’ படம் நிறைவேற்றியுள்ளது. இந்த வாய்ப்பை வழங்கிய விநய் பரத்வாஜூக்கு நன்றி’ என்றார்.
யாஷிகா ஆனந்த் கூறும்போது, ‘நிஜத்தில் நான் எப்படி மாடலிங் செய்கிறேனோ, அப்படித்தான் இப்படத்திலும் நான் மாடலாக நடித்திருக்கிறேன். நான் மிகப்பெரிய திரில்லர் ஃபேன். அதனால் இப்படத்தின் கதை பிடித்து நடித்தேன். நான் அஜித் குமாரின் மிகப்பெரிய ஃபேன். ரிச்சர்ட் ரிஷியிடம் பேசும்போது, அஜித் குமாருக்கு சற்று நெருக்கம் ஆகியுள்ளேன் என்று நினைத்து சந்தோஷப்படுவேன்’ என்றார். தயாரிப்பாளரும், நடிகையுமான புன்னகை பூ கீதா கூறுகையில், ‘யாஷிகா ஆனந்த் அதிக ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். ஒரு காட்சியில் பெட்டிக்குள் அவர் மடங்கி உட்கார வேண்டும். அவரது காலில் ஏற்கனவே பிளேட் பொருத்தப்பட்டுள்ளது. அப்படி உட்காருவது மிகவும் கஷ்டம். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நிறைய நேரம் உட்கார்ந்து இருந்தார்’ என்றார்.