பெரம்பலூரில் தூய்மையே சேவைத் திட்டம்
பெரம்பலூரில் தூய்மையே சேவைத் திட்டம்
வரும் அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு தூய்மையான மற்றும் சுகாதாரமான இந்தியாவை படைப்போம் என்ற கருத்தை மையமாக வைத்து தூய்மையே சேவை தினம் கடைபிக்கப்படுகிறது. இத்தினத்தையொட்டி பெரம்பலூரில் மத்திய அரசின் நேருயுவகேந்திரா மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் தூய்மைப் பணி மற்றும் தூய்மைப்பணி செய்வதின் முக்கியத்துவம் குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தூய்மையே சேவை இயக்கத்தின் சார்பில் தூய்மைப்பணி செய்வதின் முக்கியத்துவம் குறித்த உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் கற்பகம் வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பின்னர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களை தூய்மை செய்யும் நிகழ்வு இன்று ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கில்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைக் காவலர்களுடன் இணைந்த தூய்மைப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கற்பகம் தொடங்கி வைத்தார் . நிகழ்ச்சியில் பேசிய அவர், தூய்மைப் பணி என்பது சிறப்பு நிகழ்வாக நிகழ்ச்சிகள் வைத்து நடத்துவதோடு அல்லாமல் தினந்தோறும் நம்மை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. கிராமப்புறங்களில் நீர் நிலைகள் , பொது இடங்களைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என முறையாகப் பிரித்தெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் தூய்மைப்பணிகளை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மேற்கொண்டனர். மேலும், அந்தந்த அரசு அலுவலகங்களில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் அலுவலகத்தையும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்வில் நேருயுவகேந்திரா மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் கீர்த்தனா, மகளிர் திட்ட இயக்குநர் அருணாச்சலம்,
தூய்மையே சேவை இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பூபதி, நகராட்சி ஆணையர் ராமர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைக் காவலர்கள், நேரு யுகேந்திராவை சேர்ந்த தன்னார்வ இளைஞர்கள் இணைந்து இந்த தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.