பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியை மீட்டெடுக்கும் பணிகளைஅமைச்சர் திரு. பூபேந்திர யாதவ் இன்று நேரில் பார்வையிட்டார்.
பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியை மீட்டெடுக்கும் பணிகளை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. பூபேந்திர யாதவ் இன்று நேரில் பார்வையிட்டார்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள சூழலியல் பூங்கா குறித்து அதிகாரிகள் அமைச்சருக்கு விளக்கினர். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் 11 வனத்துறை அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள் வாகனத்தை மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் வழங்கினார்.
சென்னை புறநகர் பகுதியான பள்ளிக்கரணையில் அமைந்துள்ள சதுப்பு நிலம் மற்றும் அங்கு அமைந்துள்ள சூழலியல் பூங்காவினை மத்திய அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1247.54 ஹெக்டேர் பரப்பளவிலான இந்த சதுப்பு நில பூங்காவானது 698 ஹெக்டேர் பரப்பில் காப்புக்காடுகள் அமைந்துள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நில காப்பு காடுகள் பூங்காவில் 518 வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகளும் மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள கூழைகிடா, வெள்ளை அரிவாள் மூக்கன், மென்தோட்டு ஆமை மற்றும் எண்ணற்ற சிறிய வகை விலங்குகள் மற்றும் உயிரினங்களுக்கு ஏற்ற புகலிடமாகவும் இந்த பூங்கா விளங்குகிறது. மேலும் இச்சதுப்பு நில பூங்காவிற்கு வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பல்வேறு வகையான பறவைகள் வருடம் தோறும் வந்து செல்கின்றன. இதனைத் தொடர்ந்து இப்பறவைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று வனத்துறை அதிகாரிகளிடம் மத்திய அமைச்சர் கூறினார்.
சுமார் 60 கோடி ரூபாய் செலவில் மத்திய மாநில இரசுகளின் நிதியுதவியுடன் சதுப்பு நில பாதுகாப்பு மையம் அமைக்கப்படவுள்ளது என்றும் இந்த பணிகளையும் அமைச்சர் ஆய்வு செய்ததுடன் சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகளான தொலைநோக்கி, உயர்மட்ட கோபுரம், கூட்ட அரங்கம், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி போன்றவை நவீன வசதிகளுடன் அமைக்கப்படும் பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் திருமதி சுப்ரியா சாஹூ உட்பட வனத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.