பதிவு கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

Loading

பதிவுத்துறையில் பன்மடங்கு உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்பப் பெற வேண்டுமென தமிழக முதல்வருக்கு ஃபெயிரா தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம்.
தமிழ்நாடு பத்திர பதிவுத் துறையில் பல வகையான ஆவணங்களின் மீது  பன்மடங்கு உயர்த்தியுள்ள முத்திரைத் தீர்வை மற்றும் பதிவு கட்டணத்தை திரும்பப் பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் தமிழ்நாடு முதல்வருக்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தங்கள் மீது தமிழக மக்கள் பெரும் நம்பிக்கையை வைத்து, நாடும் ஏடும் நாளும் போற்றும் வகையில் அல்லும் பகலும் அயராது மக்கள் நலனை மட்டுமே சிந்தித்து தாங்கள் ஆட்சி செய்வீர்கள் என்று மக்கள் தங்கள் மீது அளவற்ற நம்பிக்கையை வைத்து வாக்களித்துள்ளார்கள்.
இப்படிப்பட்ட வெகுஜன மக்களின் நம்பிக்கையை தாங்கள் எந்த சூழ்நிலையிலும் உடைத்து விடக்கூடாது என தங்களுக்கு எங்களின் பணிவான வேண்டுகோள்!
பொதுவாக பத்திர பதிவுத்துறை என்பது பொதுமக்கள் சேவை பெறும் ஒரு துறையே தவிர, இது ஒரு வணிகத்துறையோ அல்லது வருவாய்த் துறையோ அல்ல என்பதும் தங்களுக்கு நன்கு தெரியும்.
இருந்த போதிலும் தமிழகத்திற்கு வருவாயை ஈட்டித் தரும் துறைகளில் பதிவுத்துறை இரண்டாம் இடம் வகிக்கிறது என்பதும் தாங்கள் நன்கு அறிந்ததே!
இப்படி இருக்கையில் இன்று 10/07/2023 முதல் பதிவுத்துறையில் பலவிதமான ஆவணங்களுக்கு முத்திரைத் தீர்வை மற்றும் பதிவு கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
 இதில் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பொது அதிகார முகவராக நியமிக்கும் ஆவண பதிவிற்கு பதிவு கட்டணம் ₹.1000/- ஆக இருந்ததை மாற்றி, ₹.2000 ஆக உயர்த்தியும்,
அதேபோன்று குடும்ப உறுப்பினர்கள் அல்லாத மூன்றாம் நபரை பொது அதிகார முகவராக நியமிக்கும் ஆவண பதிவிற்கு பதிவு கட்டணம் ரூபாய் ₹.10,000/- ஆக இருந்ததை மாற்றி, சந்தை மதிப்பில் 1% ஆக உயர்த்தியும்,
கைமாற்றுத் தொகையுடன் கூடிய பொது அதிகார ஆவண பதிவிற்கு பதிவு கட்டணம் 1% ஆக இருந்ததை மாற்றி, கைமாற்றுத் தொகை அல்லது சந்தை மதிப்பு இதில் எது அதிக தொகையோ அதற்கு 1% ஆக உயர்த்தியும்,
கட்டுமான ஒப்பந்தங்களுக்கு தற்பொழுது பதிவுக் கட்டணம் கட்டுமான மதிப்பீடு அல்லது ஒப்பந்தத் தொகையில்  1% ஆக இருந்ததை மாற்றி, கட்டுமான மதிப்பீட்டுத் தொகை அல்லது கைமாற்றுத் தொகை இதில் எது அதிக தொகையோ அதற்கு 3% ஆக உயர்த்தியும்,
நீதிமன்றம் அல்லது அரசு வருவாய் அலுவலர்களால் வழங்கப்படும் விற்பனைச் சான்று பதிவிற்கு பதிவு கட்டணம் ஏலத்தொகை மதிப்பிற்கு 1% ஆக இருந்ததை மாற்றி, 2% ஆக உயர்த்தியும்,
அதேபோன்று வங்கி அதிகாரி அல்லது கலைப்பு அதிகாரி வழங்கப்படும் விற்பனைச் சான்று பதிவிற்கு
சந்தை மதிப்பிற்கு ஈடாக  பதிவு கட்டணம் 2% ஆக இருந்ததை மாற்றி, 4% ஆக உயர்த்தியும்,
குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட் ஆவணம், விடுதலை ஆவணம், பாகப்பிரிவினை ஆவணம், கூட்டாண்மை கலைவு ஆவணம் உள்ளிட்ட ஆவண பதிவிற்கு அதிகபடியான முத்திரை தீர்வை ₹.25000/- ஆக இருந்ததை மாற்றி, ₹.40,000/- ஆக உயர்த்தியும்,
அதே போன்று குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட் ஆவணம், விடுதலை ஆவணம், பாகப்பிரிவினை ஆவணம், கூட்டாண்மை கலைவு ஆவணம் உள்ளிட்ட ஆவண பதிவிற்கு அதிகப்படியான பதிவு கட்டணம் ₹.4000/- ஆக இருந்ததை மாற்றி, ₹.10,000/- ஆக உயர்த்தியும்,
குத்தகை ஆவண பதிவிற்கு பதிவு கட்டணம் அதிகபட்சமாக ₹.20,000/- ஆக இருந்ததை மாற்றி, ₹.40,000 ஆக உயர்த்தியும்,
கடனை ரத்து செய்து பதிவு செய்யப்படும் ரசீதிற்கு பதிவு கட்டணம் ₹.20 ஆக இருந்ததை மாற்றி, ₹.200 ஆக உயர்த்தியும்,
தனிமனை ஆவண (தனியார் இருப்பிட) பதிவிற்கான கட்டணம் ₹.200 இல் இருந்து ₹.1000 ஆக உயர்த்தியும்,
உரிமை ஆவணம் ஒப்படைப்பு பதிவிற்கு அதிகபட்சமாக முத்திரைத்  தீர்வை ₹.30,000/- ஆக இருந்ததை மாற்றி,  ₹.40,000/- ஆக உயர்த்தியும்,  அதேபோன்று உரிமை ஆவணம் ஒப்படைப்பு பதிவிற்கு அதிகபட்சமாக பதிவு கட்டணம் ₹.6000/ ஆக இருந்ததை மாற்றி, ₹.8000/ ஆக உயர்த்தியும்,
 சுவாதீனம் அல்லாத அடமானக் கடன் பதிவிற்கு அதிகபட்சமாக முத்திரைத் தீர்வை ₹.30,000/- ஆக இருந்ததை மாற்றி, ₹.40,000/- ஆக உயர்த்தியும்,
அதேபோன்று சுவாதீனம் அல்லாத அடமானக் கடன் பதிவிற்கு அதிகபட்சமாக பதிவு கட்டணம்  ₹.6000/- ஆக இருந்ததை மாற்றி, ₹.8000 ஆக உயர்த்தியும்,
மேல் ஈடு மற்றும் மேல் அடமானம் பதிவிற்கு அதிகபட்சமாக முத்திரைத் தீர்வை ₹.40,000/- ஆக இருந்ததை மாற்றி, ₹.50,000/- ஆக உயர்த்தியும், அதேபோன்று மேல் ஈடு மற்றும் மேல் அடமானம் பதிவிற்கு அதிகபட்சமாக பதிவு கட்டணம் ₹.10,000/- ஆக இருந்ததை மாற்றி, ₹.15,000/- ஆக உயர்த்தியும்,
கணினி பதிவு கட்டணம்  ₹.100/- ஆக இருந்ததை மாற்றி ₹.200/- ஆக உயர்த்தியும்,
குறிப்பாணை பதிவிற்கு (MEMO FEES) பதிவு கட்டணம் ₹.10/- ஆக இருந்ததை மாற்றி, ₹.100 ஆக உயர்த்தியும்,
பொது அதிகார  அத்தாட்சி பதிவிற்கு பதிவு கட்டணம் ₹.20/- ஆக இருந்ததை மாற்றி, ₹.500/- ஆக உயர்த்தியும்,
பிணையப் பத்திரங்கள் பதிவிற்கு பதிவு கட்டணம் அதிகபட்சமாக  ₹.10,000/- ஆக இருந்ததை மாற்றி, ₹.15,000/- ஆக உயர்த்தியும்,
முத்திரையிட்ட உறை ஒப்படைப்பு பதிவிற்கு பதிவு கட்டணம் ₹.200/- ஆக இருந்ததை மாற்றி ₹.2000/- ஆக உயர்த்தியும்,
முத்திரையிட்ட உறையை திரும்ப பெறும் பதிவிற்கு பதிவு கட்டணம் ₹.50/- ஆக இருந்ததை மாற்றி ₹.500/- ஆக உயர்த்தியும்,
முத்திரையிட்ட உறை திறப்பிற்கு பதிவு கட்டணம் ₹.50/- ஆக இருந்ததை மாற்றி ₹.200/- ஆக உயர்த்தியும்,
விடுமுறை நாளில் பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு பதிவு கட்டணம் ₹.200/- ஆக இருந்ததை மாற்றி ₹.1000/- உயர்த்தியும்,
இன்னும் வேறு சில ஆவணங்களுக்கு தற்பொழுது உள்ள கட்டணத்திலிருந்து 20 மடங்கு வரை கட்டணங்களை அதிகபட்சமாக உயர்த்தி தமிழ்நாடு பதிவுத்துறை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இது முழுக்க முழுக்க தங்களை நம்பி நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் நன்மை செய்வீர்கள் என்று வாக்களித்து தங்களை முதல்வராக தேர்ந்தெடுத்து, முதல்வர் அரியணையில் அமர வைத்த பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
தற்பொழுது தான் கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறை ஓரளவிற்கு வளர்ச்சியும் எழுச்சியும் பெற்று வருகிறது.
ஏற்கனவே ஒருபுறம் வழிகாட்டி மதிப்பு பன்மடங்கு உயர்வு மறுபுறம் இப்படி முத்திரைத் தீர்வை மற்றும் பதிவு கட்டணம் வெகுவாக உயர்வு என்பது எதிர்வரும் நாட்களில் கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறை பெருமளவில் பாதிப்பதோடு, இந்த கட்டணங்கள் அனைத்தும் வீடு வாங்கும் பொதுமக்கள் தலையில் பேரிடியாய் விழுவதோடு அவர்களுக்கு பெரும் சுமை கூடும் மேலும் வீடு-மனை-நிலம் வாங்குவது என்பது வெறும் கனவோடு கலையும் சூழல் ஏற்படும்.
ஆகவே பெருமதிப்பிற்குரிய மாண்புமிகு தமிழகத்தின் முதல்வர் அவர்கள் மேற்கண்ட பதிவுத்துறை கட்டண உயர்வினால் பொதுமக்களுக்கு வீணாக ஏற்படும் சிரமங்களை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, பதிவுத் துறை என்பது வணிகத்துறையோ அல்லது வருவாய்த் துறையோ அல்ல என்பதை தாங்கள் தாயுள்ளத்தோடு உணர்ந்து, மேற்கண்ட உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்பப் பெற கனிவுடன் பரிசீலித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஃபெயிரா தலைவர் டாக்டர்.ஹென்றி தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *