முத்திரைத்தாள் கட்டணம் பன்மடங்கு உயர்த்தி சட்ட திருத்தம்.

Loading

முத்திரைத்தாள் கட்டணம் பன்மடங்கு உயர்த்தி சட்ட திருத்தம்.

பதிவுத்துறை அமைச்சருக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர்
ஆ.ஹென்றி கடிதம்.
முத்திரைத்தாள் கட்டணம் பன்மடங்கு உயர்த்துவதற்கான சட்ட திருத்த மசோதா முன் வடிவு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அதுவும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது
நமக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று மக்கள் சாதாரணமாக கடந்து சென்றாலும், இது
சாதாரண சாமானிய மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

எப்படியெனில் ஒவ்வொரு நாளும் ஏழை எளிய மக்கள் எத்தனையோ காரணங்களுக்காக மைய
மாநில அரசு அலுவலகங்களில் பல்வேறு விதமான அரசு சலுகைகளை பெறவும், வருவாய்த்
துறைகளில் பல்வேறு சான்றுகள் வாங்கவும், வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், கல்வி
நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், இப்படி ஒவ்வொன்றிற்கும் உறுதிமொழி பத்திரம்
தாக்கல் செய்கிறார்கள்.

உறுதிமொழி பத்திரம் (அபிடவிட்-affidavit) தாக்கல் செய்யும் போது குறைந்த பட்சம் தற்போது
முத்திரைத்தாள் கட்டணம் ₹.20/- ரூபாயாக மட்டுமே இருக்கிறது. அது இனி ₹.200/- ஆக மாறும்.
அதிகாரம் அளிக்கும் ஆவணங்களில் ₹.100/- ரூபாய்க்கு பதிலாக இனி ₹.1000/- ரூபாயாக
மாறும். சங்கம் மற்றும் அறக்கட்டளை போன்ற ஒரு சில இனங்களில் ₹.50/- ரூபாய்க்கு பதிலாக
₹.1000/- ரூபாயாக மாறும். இதனால் இது சாதாரண மக்களுக்கு மிகப் பெரும் பாதிப்பை
ஏற்படுத்தும்.

வீட்டு வாடகை ஒப்பந்தம், லீஸ் அக்ரிமெண்ட், சிறு குறு தொழில்களில் உள்ள ஒப்பந்தங்கள்,
வங்கி ஒப்பந்தங்கள் என்று ஒவ்வொன்றிற்கும் அந்தத்த மாநில அரசின் முத்திரைத்தாள் சட்டப்படி
தான் நிறைவேற்ற வேண்டும். இதனால் வங்கி கடன், மற்றும் சட்டப்படியான அனைத்து விதமான
ஒப்பந்தங்கள் (agreement) அனைத்திற்கும் செலவுகள் இனி உயரும்.

அரசுக்கு பதிவுத்துறை மூலம் நிச்சயம் வருவாய் உயர்வு வேண்டும் அதில் யாருக்கும் மாற்றுக்
கருத்து இல்லை. ஆனால் முத்திரைத்தாள் மதிப்பு உயர்வில், வரலாற்றில் இதுவரை இல்லாத
வகையில் தற்பொழுது கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒருவேளை இருபது ரூபாய் முத்திரைத்தாளை அச்சடிப்பதற்கான உற்பத்தி செலவுகள்
அதிகமாகுமானால், டிஜிட்டல் வடிவில் பதிவுத்துறையின் இணையதளம் வாயிலாக கட்டணம்
செலுத்தி, இ-முத்திரைத்தாளை பெற்று மக்கள் பயன்படுத்தும் வகையில் வழிவகை செய்யலாம்.
ஏற்கனவே வங்கிகள், NBFC நிறுவனங்கள் Documentation charges என்ற பெயரில் கொள்ளை லாபம்
அடிக்கிறது. முத்திரை தாள் கட்டணத்தை மட்டும் உயர்த்தவில்லை. மேலும் முத்திரைத்தாள்
சட்டத்திலும் தற்போது திருத்தப்பட்டு உள்ளது.

இந்த புதிய சட்ட திருத்ததால் நிறுவனங்கள்
ஆவண கட்டணங்களை மாற்றி அமைக்கும். இதனால் செலவீனங்கள் மேலும் உயரும். இவை
அனைத்தும் ஏழை, எளிய நடுத்தர மக்கள் தலையில் தான் விழும். ஒரேடியாக பத்து முதல் 20
மடங்கு வரை உயர்த்துவது என்பது சாதாரண சாமானிய மக்களுக்கு பெரும் பாதிப்பை
ஏற்படுத்தும்.

பொதுவாக பதிவுத்துறையில் பதியப்படும் ஆவணங்களில் குறிப்பாக பல வகையான ஒப்பந்தம்,
பொது அதிகாரம் உள்ளிட்ட பல வகையான அதிகார ஆவணங்களில் பயன்படுத்தப்படும்
முத்திரைத்தாள் கட்டணத்தை மாற்றி அமைத்தால், அது பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை
ஏற்படாது.

மாறாக பொத்தம் பொதுவாக பதிவு செய்யப்படாத அனைத்து விதமான உறுதிமொழி உள்ளிட்ட
ஆவணங்களுக்கும் பயன்படுத்தப்படும் முத்திரைத்தாள் கட்டணத்தை இப்படி பன்மடங்கு
உயர்த்தினால் அது சாதாரண சாமானிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆகவே பெருமதிப்பிற்குரிய மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர்
அவர்கள் மேற்கண்ட முத்திரைத்தாள் கட்டண உயர்வு பிரச்சனைகளில் பொதுமக்களின் நலனை
தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, மறுபரிசீலனை செய்து பதியப்படும் ஆவணங்களைத்
தவிர்த்து பதிவு செய்யப்படாத ஆவணங்களுக்கு குறைந்தபட்சம் கட்டண உயர்வை நிர்ணயிக்க
வேண்டும் என பொதுமக்களின் சார்பில் வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *