ஸ்விகி ஊழியர்கள் 50-க்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்த போராட்டம்
திருவள்ளூரில் ஸ்விகி ஆப் மூலம் கேட்கும் உணவுப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். அதன் படி திருவள்ளூரில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பிட்ட ஹோட்டலின் பெயர், என்ன வகையான உணவு, எத்தனை நபர்களுக்கு உணவு போன்ற விவரங்களை தெரிவித்து ஸ்விகி ஆப் மூலம் ஆர்டர் கொடுத்தால், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வாடிக்கையாளர் கோரிக்கையை ஏற்று உணவு வாங்கி அவர்களுக்கு விநியோகிக்கப்படும். அதற்காக சர்வீஸ் சார்ஜோடு சேர்த்து பில் தொகை வசூலிக்கப்படும். திருவள்ளூர் மாவட்ட தலைநகரில் உள்ள 50-க்கும் மேற்பட்ட சைவ, அசைவ உணவகங்கள் ஸ்விகி ஆப் மூலம் உணவு வழங்க பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் வாடிக்கையாளர்கள் கேட்கும் சைவ, அசைவ உணவுப் பொருட்களை அவர்கள் கேட்கும் கடையிலிருந்து வாங்கி வந்து ஸ்விகி ஊழியர்கள் சப்ளை செய்து வருகின்றனர். 5 கி.மீட்டர் தூரம் வரை கொண்டுசென்றால் ஒரு தொகை, 5 முதல் 10 கி.மீட்டர் தூரம் வரை கொண்டு சென்றால் ஒரு தொகை என இவர்களுக்கு சர்விஸ் சார்ஜ் நிர்ணயிக்கப்பட்டது. இதனால் திருவள்ளூர் நகரில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த ஸ்விகி உணவு டெலிவரி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவள்ளூரில் பணிபுரியும் ஸ்விகி ஊழியர்களுக்கு கொடுப்பதாக அறிவித்த தொகையை சர்விஸ் சார்ஜாக வழங்காமல் குறைத்து வழங்குவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஆர்டர் வரும் இடத்திற்கு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் போது, வாடிக்கையாளர்கள் மதுபோதையில் தகராறு செய்வதுடன் பணத்தை தராமல் அடித்தும் விரட்டி விடுகின்றனர். இதனால் தங்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை. உணவுப் பொருட்களை சப்ளை செய்வதற்காக கையில் இருக்கும் பணத்தை வைத்து பெட்ரோல் போட்டுக் கொண்டு டெலிவரி செய்கிறோம். ஆனால் ஸ்விகி நிர்வாகம் அறிவித்தது போல் சர்விஸ் சார்ஜ் வழங்குவதில்லை என கூறப்படுகிறது.
எனவே ஸ்விகி நிறுவனத்தின் செயல்பாட்டைக் கண்டித்து திருவள்ளூரில் பணிபுரியும் 50-க்கும் மேற்பட்ட ஸ்விகி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பல முறை மேலாளரிடம் புகார் தெரிவித்திருப்பதாகவும், விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தும் இது வரை நடவடிக்கை எடுக்காததால் இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கோடை காலத்தில் பணியாற்ற ஊக்கத்தொகை. இரவு நேரத்தில் பணி பாதுகாப்பு இ எஸ் ஐ. பி எப் உள்ளிட்ட கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என வலுயுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.